2016 பக்ரீத் – 2: ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்கமுடியாது ஆனால் முடியும் – குர்-ஆனின் குழப்பம்

முந்தைய கட்டுரையில், குர்-ஆன் 37:107ம் வசனத்தின் அடிப்படையில் முஸ்லிம்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. இப்ராஹீம் தம் மகனை பலியிடும் போது தடுத்து நிறுத்திய அல்லாஹ், அவனுக்கு பதிலாக ஏன் ஒரு ஆட்டை பலி வாங்கினார்? ஒரு மனிதனை விடுவிக்க, ஏன் ஒரு ஆட்டின் இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினார்? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

தற்போதைய கட்டுரையில், ஒருவரின் பாரத்தை (பாவங்களை) இன்னொருவர் சுமக்கமுடியாது என்று குர்-ஆன் சொல்லும் வசனங்களையும், அவைகளுக்கு முரணாக இருக்கும் இதர குர்-ஆன் வசனங்களையும் சுருக்கமாக ஆய்வு செய்யப்போகிறோம். 

1. ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்கமுடியாது

கீழ்கண்ட வசனங்களில் ஒருவரின் சுமைகளை இன்னொருவர் சுமக்கமுடியாது என்று குர்-ஆன் சொல்கிறது.

குர்-ஆன் 6:164

6:164. “அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும். 

குர்-ஆன் 17:13-15

17:13. ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.

17:14. “நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).

17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.

குர்-ஆன் 35:18 

35:18. (மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.

குர்-ஆன் 39:7

39:7. (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.

குர்-ஆன் 53:38

53:38. (அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்;

(மேற்கண்ட வசனங்களை அனைத்தும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது).

2. ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமப்பார் (குர்-ஆனின் முரண்பாடு)

மேற்கண்ட வசனங்கள் மிகவும் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் ‘ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்கமுடியாது என்றும், ஒருவரின் சுமையில் சிறிது கூட இன்னொருவர் சுமக்கமுடியாது என்றும் சொல்கிறது’. ஆனால், இதே குர்-ஆன் இன்னொரு இடத்தில் மேற்கண்டவைகளுக்கு எதிராக சொல்வதை  காணமுடியும். இது எப்படி சாத்தியமாகும். குர்-ஆன் தனக்குத்தானே முரண்படுகின்றது. இவ்வசனங்களை நான்கு தமிழாக்கங்களிலிருந்து படிப்போம்.

குர்-ஆன் 16:24,25

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

16:24. “உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், “முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.

16:25. கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

16:25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

16:25. இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக, மறுமைநாளில் தங்களுடைய பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையினால் யார் யாரை இவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள். பாருங்கள்! எப்படிப்பட்ட மோசமான சுமையை இவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்!

பிஜே தமிழாக்கம்:

25. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.254

3) நியாயத்தீர்ப்பு நாளில் பிறரது சுமையை சுமப்பவர்கள்

நாம் இரண்டு வகையான குர்-ஆன் வசனங்களை மேலே படித்தோம். குர்-ஆன் சில வசனங்களில் ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்கமுடியாது என்றுச் சொல்கிறது. அதே குர்-ஆன் இன்னொரு இடத்தில் (16:25), ஒருவர் இன்னொருவரின் சுமையை சுமப்பார் என்றுச் சொல்கிறது. இது முரண்பாடு அல்லவா?

இவ்வசனத்தை புரிந்துக்கொள்வதற்கு இந்த உதாரணத்தை கவனிக்கவும். ‘A’ என்பவர் இஸ்லாமை ஏற்காத நபர் என்று வைத்துக்கொள்வோம். இவர் இன்னொரு நபர் ‘B’ என்பவரை தன் பேச்சுக்களால் ’தாவா’ செய்து, ‘B’ இஸ்லாமை தழுவாமல் இருக்கும் படி பார்த்துக்கொண்டார். எனவே, ’B’ என்பவர் ஒரு இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது நாத்தீகராகவோ வாழ்நாள் எல்லாம் வாழ்ந்துவிட்டார். இவ்விருவரும் மரித்துவிடுகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளில், அல்லாஹ்வின் மேற்கண்ட வசனத்தின் படி, ‘A’ என்பவர் தன் பாவ சுமைகளையும் சுமக்கவேண்டும், அதே நேரத்தில் ‘B’ என்பவரின் சுமைகளையும் சுமக்கவேண்டும். 

இதன் படி பார்த்தால், ‘A’ என்பவர் ‘B’ என்பவரின் சுமைகளையும் சுமக்கின்றார் என்று அர்த்தமாகின்றதல்லவா? இது ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமப்பதற்கு சமம் தானே!

இந்த குர்-ஆன் வசனம் 16:25, குர்-ஆனின் இதர வசனங்களை தகர்த்து விடுகின்றதல்லவா? இவ்விரண்டு விவரங்களும் குர்-ஆனிலிருந்தே வருகின்றன. எவைகளை நாம் ஏற்றுக்கொள்வது? குர்-ஆனின் படி, ஒருவரின் பாவத்தை இன்னொருவர் சுமக்கமுடியுமா? அல்லது முடியாதா? இரண்டிற்கும் குர்-ஆன் ’ஆமாம்’ என்று தான் பதில் சொல்கிறது.

4) குர்-ஆனின் எதிரும் புதிரும்

குர்-ஆன் ஆங்காங்கே முரண்படுவதை மேலே கண்டோம். நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். ஒரு வசனத்தில் ”ஒருவர் இன்னொருவரின் சுமையை சுமக்கமுடியாது’ என்றுச் சொல்லிவிட்டு, அடுத்த வசனத்திலேயே உடனே முரண்படுகின்றது குர்-ஆன்.

குர்-ஆன் 29:12,13

29:12. நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!

29:13. ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள். 

12ம் வசனத்தில் ‘ஒருவரின் சுமையை இன்னொருவர் விரும்பினாலும் சுமக்கமுடியாது, அப்படிச் சொல்பவர்கள் பொய்யர்கள்’ என்று குர்-ஆன் சொல்கிறது. ஆனால், 13ம் வசனத்தில், ‘தங்கள் சுமைகளோடு கூட மற்றவர்களின் சுமைகளையும் சுமப்பார்கள்’ என்றுச் சொல்லி முரண்படுகின்றது.

முடிவுரை: இதுவரை குர்-ஆனிலிருந்து இரண்டு வகையான முரண்பட்ட வசனங்களை வாசித்தோம். ஒருவர் இன்னொருவரின் சுமையை சுமக்கமுடியுமா? என்ற கேள்வியைக் கேட்டால், குர்-ஆன் “முடியாது, ஆனால் முடியும்” என்ற வகையில் பதில் சொல்லியுள்ளது. 

அடுத்த பதிவில், இந்த முரண்பட்ட வசனங்களுக்கு திரு பிஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் 254வது விளக்கத்தில் சொல்லியுள்ள பதிலை சிறிது ஆய்வுச் செய்வோம்.  அதன் பிறகு, குர்-ஆனில் மட்டுமல்ல, ஹதீஸ்களிலும், ஒருவர் இன்னொருவரின் சுமையை சுமக்க அல்லாஹ் கட்டாயப்படுத்திய விவரங்களைக் காண்போம்.

இன்னும் சுமைகள் கூட்டப்படும்…


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்