2013 கிறிஸ்துமஸ்: பாகம் 3 - இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்

[கிறிஸ்துமஸ் 2013: பாகம் 1ஐ, பாகம் 2ஐ  சொடுக்கி படிக்கவும்]

[உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும் உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]

அப்துல்லாஹ்: அண்ணே! எப்படி இருக்கீங்க

உமர்: கர்த்தரின் கிருபையால் நான் நலமாக உள்ளேன், நீ எப்படி இருக்கிறாய்?

அப்துல்லாஹ்: அல்லாஹ்வின் அருளால் நலமாக இருக்கிறேன்.  கடந்த முறை நாம் பேசும் போது, மர்யம் அவர்களுக்கு அல்லாஹ் செய்த அற்புதத்தை நீங்கள் விமர்சித்தீர்கள். ஒரு சரியான காரணம் இல்லாமல் அல்லாஹ் அற்புதம் செய்தார் என்று குற்றம் சாட்டினீர்கள். இப்போது நான் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லுங்கள்.

உமர்: சரி தம்பி, உன் கேள்வியை கேள்.

அப்துல்லாஹ்: இயேசு அற்புதமாக பிறந்தவர், தந்தையில்லாமல் பிறந்தவர் என்று பைபிள் சொல்கிறது அல்லவா?

உமர்: குர்ஆன் கூட இப்படித்தானே சொல்கிறது

அப்துல்லாஹ்: இப்போது என் கேள்வி என்னவென்றால், ஏன் பைபிளின் தேவன் இயேசுவை அனுப்பும் போது, அற்புதம் செய்து அனுப்பினார்? இயற்கையான முறையில் ஒரு தம்பதிகள் மூலமாக அனைவரும் பிறப்பது போல பிறக்கச்செய்து இருக்கலாம் அல்லவா? ஏன் கணவர் இல்லாமல் ஒரு கன்னியின் மூலமாக இயேசுவை பிறக்கச் செய்யவேண்டும்? 

அல்லாஹ் மர்யம் அவர்களுக்குச் செய்த அற்புதம் பற்றி எந்த கேள்வியை நீங்கள் கேட்டீர்களோ, அதே கேள்வி இப்போது உங்களுக்கு வருகிறது, இதற்கு பதில் சொல்லுங்கள். பைபிளின் தேவன் எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல், ஏன் அற்புதமான முறையில் மர்யம் கருத்தரிக்கச் செய்து இயேசுவை இவ்வுலகில் அனுப்பினார்?

உமர்: தம்பி, நீ  உன்னை மித மிஞ்சிய அறிவாளி என்று நினைத்துக்கொள்கிறாய். உண்மையில் இந்த கேள்வியை கேட்கவேண்டியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். நான் உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த கேள்வியை நீயே கேட்கிறாய்.

அப்துல்லாஹ்: நீங்கள் தலைப்பை  மாற்றி பேசாதீங்க. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க?

உமர்: இயேசு இவ்வுலகில் வரும் போது, ஏன் ஒரு தம்பதிகளுக்கு இயற்கையான முறையில் பிறக்காமல், ஒரு கன்னிகைக்கு அற்புதமாக பிறந்தார் என்பதற்கு எங்களிடம் பதில் உண்டு. ஆனால், உங்கள் இஸ்லாமில் அதற்கு பதில் உண்டா?  இந்த ஒரு கேள்விக்கு தரப்படும் பதில் தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய பிளவு ஆகும்.

இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே இருந்திருந்தால், தேவன் அவரை இயற்கையான முறையில் பிறக்கவைத்திருப்பார். ஆனால், அவர் தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் மேலானவர் என்பதால் அவர் அற்புதமாக பிறந்தார்.  ஒரு ஆணின் துணையில்லாமல் மரியாள் கர்ப்பம் தரிக்கச் செய்து, தேவன் இயேசுவை அனுப்பினார்.

ஆதியாகமம் 3:15ல் தேவன், இயேசுவின் எப்படி பிறப்பார் என்பதை தெளிவாக கூறினார். ஒரு ஸ்திரியின் வித்தின் மூலமாக பிறக்கப்போகின்றவர் சாத்தானை ஜெயிப்பார் என்று கூறினார்.

ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

இயேசு ஆதியிலிருந்து இருந்தபடியினாலே, அவர் கணவன் மனைவி உறவின் மூலமாக பிறக்கவில்லை. இன்னும் அனேக வசனங்களை நான் சொல்லமுடியும். ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், "அல்லாஹ் ஏன் இயேசுவை அற்புதமான முறையில் பிறக்கச்செய்யவேண்டும்?" என்பதாகும். [மற்றவர்களைப் பார்த்து காப்பி அடித்தால், இப்படித் தான் முழிக்கவேண்டி வரும்]

அப்துல்லாஹ்: அது அல்லாஹ்வின் விருப்பம். அவரை கேள்வி கேட்க யாராலும் முடியாது.

உமர்: இறைவனை கேள்வி கேட்கமுடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காரணம் இல்லாமல் ஏன் இயேசுவை ஒரு கன்னிப்பெண் கர்ப்பம் தரிக்கச் செய்து அதன் மூலமாக பிறக்கச் செய்யவேண்டும்? என்பது தான் கேள்வி

அப்துல்லாஹ்: நான் தான் சொன்னேனே, அது அவரது விருப்பம் என்று?

உமர்:  தம்பி, சரியாக புரிந்துக்கொள். இறைவன் செய்யும் அனைத்தையும் பற்றி நாம் கேள்வி கேட்கமுடியாது. இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஏன் இறைவன் இப்படி செய்யவேண்டும் என்ற கேள்வியை நாம் கேட்கலாம் இல்லையா? நாம் சிந்திக்கலாம் அல்லவா?

இறைவன் நம்மைப்போல ஞானமில்லாதவர் அல்ல, அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு காரணம் இருக்கும்.  

அப்துல்லாஹ்: இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஆதாமை எப்படி படைத்தார்? தாய் இல்லாமல் படைத்தார் அல்லவா? அது போல இயேசுவை தந்தையில்லாமல் பிறக்கச் செய்தார் அவ்வளவு தான். இருவரையும் தம் வார்த்தையினால் பிறப்பித்தார் அல்லாஹ்

உமர்: இப்போது தான் நீ என் வழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறாய். ஆதாம் தாய் இல்லாமல் பிறந்தார் என்றுச் சொல்கிறாய். இதற்கு காரணம் என்ன? ஆதாம் தான் முதல் மனிதன், எனவே இறைவனுக்கு வேறு வழியே இல்லை, தாய் இல்லாமல் தான் ஆதாமை இறைவன் உருவாக்கமுடியும்.

ஆனால், ஆதாமைத் தவிர உலகில் வேறு எந்த மனிதனாக இருந்தாலும் சரி, அவன் ஆண் பெண் உறவு மூலமாகத்தான் பிறக்கவேண்டும். இது தான் இயற்கை நியதி, மனித இனம் பெருகுவதற்கு இது தான் இறைவன் உருவாக்கிய திட்டம்.

ஆனால், இயேசுவின் பிறப்பு விஷயத்தில் மட்டும் ஏன் இறைவன் தான் உருவாக்கிய இயற்கை திட்டத்தை புறக்கணித்துவிட்டு வித்தியாசமாக செயல்படவேண்டும்?

உன் அல்லாஹ்விற்கு தன் நபியை அனுப்ப கி.பி. முதல் நூற்றாண்டில் "மர்யம்" என்ற ஒரு பெண் கிடைத்த போது, ஏன் அவருக்கு ஒரு ஆண் கிடைக்கவில்லை? மரியமை யாரும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்களா?

இயேசுவை ஒரு விசேஷித்த முறையில் அனுப்ப அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்?

ஒரு சாதாரண நபியை அனுப்ப, இயற்கை விதியை ஏன் அல்லாஹ் மீறினார்?

அப்துல்லாஹ்: இதெல்லாம் ஒரு கேள்வியா?

உமர்: ஆமாம், இது நல்ல கேள்வி தான். அல்லாஹ் எது செய்தாலும் சும்மா செய்துவிடுவாரா? ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல, ஞானமில்லாமல் அல்லாஹ் செயல்படுவாரா? பல கோடி மக்களை இயற்கையான முறையில் பிறக்கச் செய்த அல்லாஹ், இயேசுவின் விஷயத்தில் மட்டும் ஏன் இயற்கைக்கு முரண்பட்டு செயல்படவேண்டும்?

உங்கள் இறைத்தூதர் முஹம்மதுவை ஒரு கணவன் மனைவியின் உறவின் மூலமாக பிறக்கச் செய்த அல்லாஹ், ஏன் இயேசுவை மட்டும் இதே பாணியில் பிறக்கச் செய்து இருக்கக்கூடாது?

அல்லாஹ்வை யாரோ நிர்பந்தித்தார்களா? அல்லது அல்லாஹ்வை ஏதோ ஒன்று இப்படி செயல்பட செய்ததா?

இதற்கு உலகில் எந்த முஸ்லிமிடமும் பதில் இல்லை, உங்கள் முஹம்மதுவிடமும் பதில் இல்லை. ஆனால், இதற்கு ஒரு சாதாரண கிறிஸ்தவனிடம் பதில் உள்ளது.

அப்துல்லாஹ்: அது என்ன பதில்?

உமர்: தம்பி இதற்கு பதில் கிறிஸ்தவத்தில் தான் உள்ளது, இஸ்லாமில் இல்லை.

அப்துல்லாஹ்: அந்த பதில் தான் என்ன? சொல்லுங்கள்.

உமர்: ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான தண்டனையிலிருந்து உலகை மீட்க, தேவனால் தான் முடியும், அதுவும் பரிசுத்தராகிய அவர் பரிசுத்தராகவே உலகில் வரவேண்டும். அற்புதராகிய அவர் அற்புதமான வகையில் உலகில் வந்து, பாவிகளாகிய நம்முடைய தண்டனையை அவர் சுமந்துக்கொண்டு நமக்கு மீட்பை கொண்டுவரவேண்டும்.

ஒரு புது மனிதன் உருவாக, ஆண் பெண் இருவரும் தேவை. ஆனால், ஏற்கனவே இருக்கிறவர் இவ்வுலகில் வரவேண்டுமென்றால், இன்னொரு ஆணின் துணை அவருக்கு தேவையில்லை. மட்டுமல்ல, ஒரு கருவாக மாறி அது குழந்தையாக வளருவதற்கான ஒரு இடம் தான் மர்யம் அல்லது மர்யமின் கர்ப்பம், அவ்வளவு தான். இறைவனே மனிதனாக வரவேண்டும் என்ற  திட்டத்தை அதே இறைவன தீட்டியதால், அவர் கன்னியின் வயிற்றில் கருவாக வந்தார்.  இது தான் கிறிஸ்தவம் கொடுக்கும் பதில்.

ஆனால், இதற்கு இஸ்லாம் என்ன பதில் சொல்லும்? இதற்கு அல்லாஹ்விடம் பதில்  உண்டா?

என்ன தம்பி பதிலைக்காணோம்.

உலகில் இயேசுவைத் தவிர, வேறு எந்த இறைத்தூதரையாவது அல்லாஹ் இப்படி விசேஷித்த முறையில் பிறக்கச் செய்தாரா?

அப்துல்லாஹ்: இல்லை...

உமர்: அப்படியானால், இயேசுவை மட்டும் ஏன் இப்படி தம்முடைய ஆவியைக் கொண்டு, ஒரு தூதனை அனுப்பி, அல்லாஹ் அற்புதமான முறையில் கருவை உருவாக்கினார்?  அல்லாஹ்வை நிர்பந்தப்படுத்தியது எது?

அப்துல்லாஹ்:. . . .

உமர்: உன்னால் மட்டுமல்ல தம்பி, உலகில் எந்த ஒரு இஸ்லாமிய அறிஞனாலும், இதற்கு பதில் சொல்லமுடியாது.

முஸ்லிம்கள் "அல்லாஹ் சும்மா செய்தார் என்றோ, இதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும் என்றோ" சொல்லிக்கொள்ளலாம். இந்த பதிலைத் தவிர வேறு பதில் முஸ்லிம்களால் கூறமுடியாது.

ஆனால், இதற்கு கிறிஸ்தவமும், பைபிளும், சுலபமாக பதில் சொல்லிவிடும். இயேசு ஆதியிலிருந்து இருந்தவர், ஆபிரகாமுக்கு முன் இருந்தவர், எருசலேம் தேவாலயத்தை விட பெரியவர், சாலொமோனை விட பெரியவர், அவர் சாவாமை உள்ளவர், இருந்தவர், இருக்கிறவர், வரப்போகிறவர், நம்மை நியாயம் தீர்க்கப்போகிறவர் அவரே. எனவே, இப்படிப்பட்டவர் உவ்வுலகில் ஏழ்மை கோலம் பூண்டு வந்தார் ஆனால் அற்புதமாக வந்தார்.

தம்பி, இனிமேல் கிறிஸ்துவின் பிறப்பு பற்றி என்னிடம் கேள்விகள் கேட்கமாட்டாய் என்று நினைக்கிறேன்.

[தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு சவால்: இயேசு ஒரு நபி மட்டுமே என்று முஸ்லிம்களாகிய நீங்கள் நம்புகிறீர்கள். குர்ஆன் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்புகிறீர்கள். அப்படியானால், ஏன் அல்லாஹ் இயேசு என்ற ஒரு நபியை இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் பிறக்கச் செய்தார் என்று உங்களால் பதில் சொல்லமுடியுமா? அல்லாஹ் அனுப்பிய எந்த ஒரு நபிக்கும் இல்லாத சிறப்பு இந்த ஒரு நபிக்கு மட்டும் அல்லாஹ் கொடுக்க காரணம் என்ன?  இயேசு செய்த அற்புதங்கள் பற்றி கேள்வி கேட்கப்படவில்லை, இயேசு ஏன் அற்புதமாக பிறந்தார் என்பது தான் கேள்வி. இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ் ஏன் இயற்கை விதியை புறக்கணித்தார்? இப்படிச் செய்ய அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்? முஸ்லிம்களால் இதற்கு பதில் சொல்லமுடியுமா?]

அப்துல்லாஹ்: அண்ணே, நான் எங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

உமர்: நல்லது தம்பி. நீயும் சிந்தித்துப்பார்.  வெறுமனே தினமும் ஐந்து வேளை குனிந்து உட்கார்ந்து எழுந்தோமானால் அந்த நாளின் கடமை முடிந்துவிட்டது என்ற கண்ணோட்டத்தில் வாழாமல், கொஞ்சம் சிந்தித்துப் பார். ஏன் எப்படி என்ற கேள்விகளை கேட்டுப்பார், அப்போது உனக்கு உண்மை புரியும். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள். 

தம்பி உனக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா 2:10,11)

மூலம்

உமரின் 2013 கிறிஸ்மஸ் தொடர் கட்டுரைகள்