குர்-ஆன் மொழிபெயர்ப்பு மோசடி 1 – ஸூரா 3:7

(இறைவனைக் காப்பாற்றும் தமிழ் முஸ்லீம் அறிஞர் பி.ஜே)

ஆசிரியர்: அற்புதராஜ் சாமுவேல்

கடவுள் மனிதனைக் காப்பாற்றுவார் என்பதுதான் மத நம்பிக்கை உள்ள அனைத்து மக்களின் கருத்து ஆகும். மனிதன் கடவுளைக் காப்பாற்ற முடியுமா என்பது அறிவுப் பொருத்தமற்ற, நடைபெற சாத்தியமற்ற கேள்வியாக இருந்தாலும், எப்படியாவது ஓட்டை உடைசல்களை சரிசெய்து அல்லது தெரியாதபடி மறைத்து அடுத்தவர் தலையில் தன் பொருளைத் தள்ளிவிடும் திறமையான வியாபாரி போல, அனேக முஸ்லீம் அறிஞர்கள் தங்கள் மதத்தைப் பற்றியும், மத போதனைகளைப் பற்றியும் நயமாக மக்கள் மனதில் நல்லெண்ணத்தை விதைக்க முயற்சிக்கிறார்கள். இவைகளை நாம் ஆராயும்போது அவர்கள் இத்தனை நாட்களாக செய்து வந்த பொய் பிரச்சாரங்கள் ஒன்றுமில்லாமல் போவதையும் நாம் காண்கிறோம். முஸ்லீம் அறிஞர்களிடம் குர்-ஆன் பற்றி நாம் எதாவது கேள்வி கேட்டால், அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, “உனக்கு அரபி தெரியுமா?” எனத் திருப்பிக் கேட்டு தந்திரமாக கேள்வியை திசை திருப்பி விடுவார்கள். ஆனால் அரபி மொழி அறிந்தவர்கள் குர்-ஆன் அரபி மொழியில் அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த புத்தகம் இல்லை என்றும் அதில் தவறுகள் உண்டு என்றும் சொல்கின்றனர். உதாரணமாக, பிரபலமான ஈரான் நாட்டு அரபி அறிஞர் அலி தஸ்தி என்பவர், “Neither the Qur’an's eloquence nor its moral and legal precepts are miraculous” என்கிறார் (Dashti 57). இதன் பொருள் என்னவெனில், “குர்-ஆனின் சொல்லாட்சியும் அதன் நல்லொழுக்க மற்றும் சட்டம் சார்ந்த போதனைகளும் அற்புதமானவையாக இல்லை” மேலும் முஸ்லிம் அறிஞர்களும் பல விசயங்களை அரபி மொழி தெரியாதவர்களிடம் இருந்து மறைக்கிறார்கள் என்றும் பரவலான ஒரு குற்றச் சாட்டு உண்டு. இக்கட்டுரையில் அப்படிப் பட்டவற்றில் ஒன்றே ஒன்றை நாம் காணப் போகிறோம்.

குர்-ஆன் மொழிபெயர்ப்பு என்பது அரபி மொழி குர்-ஆன் அதிலும் குறிப்பாக உத்மான் அவர்கள் காலத்தில் பொதுவான குர்-ஆன் ஆக அங்கீகரிக்கப்பட்ட அரபி குர்-ஆன் அடிப்படையிலேயே அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. உத்மான் அவர்களின் உத்தரவின் பேரில் மற்ற அனைத்து குர்-ஆன்களும் எரிக்கப்பட்டது. அதில் குர்-ஆன் தொகுப்புக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்ட முதல் கலீஃபா மற்றும் முஹம்மதுவின் தோழரான அபுபக்கர் அவர்களிடமும் அதன்பின்பு முஹம்மது அவர்களின் மனைவி ஹப்சா அவர்களிடமும் இருந்த பிரதியும் கூட எரிக்கப்பட்டிருக்க வேண்டும். மொழிபெயர்ப்புகள் மூல மொழியின் பொருளை முழுமையாக தருவது சற்று கடினம் என்றாலும், மூல மொழியில் இல்லாததைக் கூட இருப்பதாகவும், சொல்லாததை சொன்னது போலவும் தோன்றும் படி மொழிபெயர்ப்புகள் உண்டு. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவர் குறிப்பிடத் தக்கவர். சுருக்கமாக பிஜே என்று பரவலாக அறியப்பட்டிருக்கும் இவரது குர்-ஆன் மொழிபெயர்ப்பு 11 முறை மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இவர் ஸூரா 3:7க்கு பின்வரும் மொழிபெயர்ப்பையும் விளக்கக் குறிப்பையும் கொடுத்திருக்கிறார்.

பிஜே மொழிப்பெயர்ப்பு: 

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர் களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் ''இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறை வனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

பிஜே அவர்களின் விளக்கக் குறிப்பு: 

…முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, 'அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது' என்று அவர்களில் சில அறிஞர்கள் கருதி, அதற்கேற்ப இவ்வசனத்தை மொழி பெயர்த்துள்ளனர். 'அல்லாஹ்வையும், அறிவுடை யோரையும் தவிர யாரும் அறிய மாட்டார்கள்' என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம். இலக்கண விதியின் படி இரு விதமாகப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் புறச்சான்றின் அடிப்படையில் நாம் செய்த தமிழாக்கம் தான் சரியானது. குர்ஆனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருள் தெரிந்த, எந்த மனிதருக்கும் பொருள் தெரியாத வசனங்களும் உள்ளன என்ற வாதம் முற்றிலும் தவறாகும். ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா? என்று சிந்தித்தால் இவ்வாறு கூற மாட்டார்கள். ஒரு மனிதருக்குக் கூடப் புரியாத வசனங்கள் குர்ஆனில் இருந்தால், மனிதர்களின் பார்வையில் அது  உளறல் என்றே கருதப்படும்...

இந்த வசனத்தில் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மட்டுமே தமிழில், “அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர் களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள்” என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.”

இவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள் என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள்.” (டாக்டர் முஹம்மது ஜான் மொழியாக்கம்)

 “இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள்.” (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்!” (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

தமிழில் மட்டுமல்ல அனைத்து ஆங்கில மொழிபெயர்ப்புகளும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள் என்றே பொருள் படும்படி மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதை பின்வரும் இணைப்பில் கண்டு உறுதி செய்து கொள்ளலாம்.

http://corpus.quran.com/translation.jsp?chapter=3&verse=7

இதில் அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்த பிழை என்ன?

1. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை கல்வியில் தேர்ந்தவர்களும் அறிவார்கள் என்று தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்.

2. குர்-ஆனில் எல்லாம் புரியும் படி உள்ளது என்றும், உளறல் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

3. குர்-ஆன் மொழிபெயர்த்த மற்ற (அனைத்து மொழி) அறிஞர்களை விட, தன் மொழிபெயர்ப்பே சரி என்று புறச்சான்று அடிப்படையில் ஒரு வாதத்தை வைக்கிறார். அகச் சான்று இல்லையா அல்லது சிறப்பு வெளிப்பாடு ஏதேனும் பெற்றாரா என்பதை நாம் பார்க்க வேண்டும்.

மேலே கண்ட முக்கியமான மூன்றைப் பற்றி நாம் ஒவ்வொன்றாகக் காணலாம். 

1. மொழிபெயர்ப்பு சரியா? உண்மை vs  உளறல்

ஸூரா 3:7ன் மொழிபெயர்ப்பைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன் அரபி மொழியில் அது எப்படி இருக்கிறது என்பதைக் காண்போம்.

என் மொழிபெயர்ப்பு:

அவன் உனக்கு புத்தகத்தை வெளிப்படுத்தினான். அதில் மிகத் தெளிவான வசனங்கள் உள்ளன. அவை புத்தகத்தின் மூலாதாரமாக (அல்லது அடிப்படையாக) உள்ளன. மேலும் தெளிவாக புரிந்து கொள்ளமுடியாத வசனங்களும் உள்ளன. ஆயினும் அவர்கள் இருதயத்தில் பின்வாங்குதல் (அல்லது தவறான வழி) இருப்பதால் ஒப்புமை உடைய (அல்லது ஒத்த தோற்றமளிக்கும்) அதின் முரண்பாட்டையும் விளக்கத்தையும்  தேடி அதனை பின்பற்றுகின்றனர். மேலும் அதின் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். மேலும் அறிவில் சிறந்தவர்கள், “நாங்கள் அதில் உள்ளவைகளை நம்புகிறோம். அவை எங்கள் ரப்பிடம் (இறைவனிடம்) இருந்து வந்தவை என்று சொல்வார்கள்”, மற்றும் அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை மனதில் கொள்ளமாட்டார்கள்.

இதில் அல்லாஹ்வைத் தவிர என்று இருப்பதற்குப் பதிலாக, “அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள்”” என்று பிஜே குர்-ஆனில் மொழிபெயர்க்கப்பப் பட்டிருக்கிறது. 

இந்த வசனத்தில் அல்லாஹ்வைத் தவிர என்று வார்த்தைக்கு அடுத்ததாக வரும் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் என்ற சொற்றொடரை நாம் அதைத் தொடர்ந்து வரும் வார்த்தைகளுடன் சேர்த்து வாசித்தால்தான் பொருள் முழுமையாக் வருகிறது. அல்லாஹ்வும் அறிவில் தேர்ந்தவர்களும் அறிவார்கள் என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்றால், வரும் பிரச்சனை என்னவெனில், அதைத் தொடர்ந்து வரும் வாக்கியத்தில் அல்லாஹ்வும் சேர்ந்து சொல்வதாக அமைந்து விடும்: ”நாங்கள் அதில் உள்ளவைகளை நம்புகிறோம். அவை எங்கள் ரப்பிடம் (இறைவனிடம்?) இருந்து வந்தவை என்று சொல்வார்கள்.” அல்லாஹ் ஏன் இப்படிச் சொல்லவேண்டும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா! ஆகவே இங்கே மொழிவிளையாட்டு மிகவும் ஆபத்தானதாகும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு ஆகும். 

இங்கே மொழிபெயர்ப்பு பிரச்சனையைத் தாண்டி, பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் உள்ள குறை என்னவெனில், அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால், உள்ளங்களில் கோளாறு இருப்போர் தான் அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியக் கூடிய வசனங்களை நாடிப் போகிறார்கள். அப்படியாயின் மதிப்பிற்குரிய பிஜே அவர்களில் உள்ளத்தில் உள்ள கோளாறு என்ன என்பதை விளக்க வேண்டும். பல மொழிபெயர்ப்புகளில் முதஷாபிஹாத் என்ற வார்த்தையை மொழிபெயர்க்காமல் அப்படியே அம்போவென விட்டு விட்டு வாசிப்பவர்களை குழப்பி இருக்கிறார்கள். அண்ணல் பிஜே அவர்களோ உள்ளத்தில் வழிகேடு இருப்பதால் அதற்கு நூதனமான விளக்கத்தைக் கொடுத்து வகையாக மாட்டி இருக்கிறார். 

2. குர்-ஆன் உளறலா, உண்மையா!

மதிப்பிற்குரிய பிஜே அவர்கள்,“ஒரு மனிதருக்குக் கூடப் புரியாத வசனங்கள் குர்ஆனில் இருந்தால், மனிதர்களின் பார்வையில் அது உளறல் என்றே கருதப்படும்” என்று விளக்கி மொழிபெயர்ப்பு மோசடியாக, அறிவில் தேர்ந்தவர்கள் என்பதை உள்ளே திணித்திருக்கிறார் என்பதைப் பார்த்தோம். ஒரு மனிதனுக்கும் புரியாத வசனங்கள் குர்-ஆனில் இல்லை என்று சொல்லும் பிஜே அவர்கள் அதே ஸூராவின் முதல் ஆயத்திலேயே அவருக்கு எதிராக ஒரு பெரிய ஓட்டை இருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார். முதல் வசனத்தில் ஆலிஃப், லாம், மீம் என்ற மூன்று அரபி மெய்யெழுத்துக்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த அரபி மொழிபெயர்ப்பிலும் அதற்கான பொருள் கொடுக்கப்படவில்லை. பி.ஜே அவர்கள் அதற்கு விளக்கமாக உயர்தர இலக்கியம் படைக்கும் அன்றைய அரபி பண்டிதர்களிடம் அப்படி ஒரு வழக்கம் இருந்ததாக சமாளிபிகேஷன் கொடுத்திருக்கிறார். 

உண்மையிலேயே பண்டைய அரபி நூல்களில் அப்படி ஒன்று இருந்தால் அதை மேற்கோள் காட்டி அல்லவா, பிஜே அவர்கள் இவ்விளக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். 29 அத்தியாயங்கள் இது போல துவங்குவதாகச் சொல்லும் பிஜே அவர்கள் ஒரு இடத்தில் கூட குர்-ஆனின் மொழி நயம் மற்றும் இலக்கிய நடை பற்றி உயர்வாக சான்றுகளுடன் சொல்ல வில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு பொருள் விலை மதிப்பற்றது மற்றும் ஒரிஜினல் என்பதை நிரூபிக்க தங்க முலாம் பூசி இதுதான் சரி என்று சொல்வது கவரிங் நகையை 24 காரட் தங்கம் என்று சொல்வதற்கு ஒப்பாகும். அலீஃப், லாம் மீம் என்பதற்கு பொருள் இல்லை என்றால் அதன் அர்த்தம் என்ன? மொழியியலில் பொருளற்ற ஒன்றை தொடர்ந்து ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தால் அது ஒரு வார்த்தையாகவே கருதப்படாது. அதற்கு பெயர் என்ன என்பதை பிஜே அவர்களே சொல்லி இருக்கிறார்கள். சிந்திக்கிறவர்கள் இதில் உள்ள விசயத்தை விளங்கிக் கொள்வார்கள்.

3. குர்-ஆன் வெளிப்பாடா அல்லது சுய கண்டுபிடிப்பா!

ஸூரா 3:7க்கு புறச்சான்று அடிப்படையில் மொழியாக்கம் கொடுத்திருக்கும் அறிஞர் பி.ஜே அவர்கள் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இவர் மட்டுமே இப்படிப் பட்ட மொழிபெயர்ப்பை என் அறிவுக்கு எட்டிய வரையில் கொடுத்திருப்பதால் பின் வருவன மிகவும் முக்கியமானது என கருதுகிறேன்.

அ) இவர் கூறும் இலக்கண விதி மற்றும் புறச்சான்று என்ன? மற்ற அரபி மொழி அறிஞர்கள் காணாத இலக்கண விதி என்ன என்பதை பிஜே விளக்க வேண்டும். அகச் சான்று ஒன்றும் இல்லை ஆகவே புறச் சான்றை நான் எடுக்கிறேன் என்று சொல்கிறாரா அல்லது தன் அறிவுக்கு அல்லது பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதாக அப்பகுதியைக் காண்பதால் அப்படி ஒரு மொழிபெயர்ப்பைத் தந்திருக்கிறாரா?

ஆ) “ஒருவருக்கும் விளங்காத ஐந்தாறு வசனங்களைக் கூட அவர்களால் எடுத்துக் காட்ட முடியாது” என்று 3:7 க்கு விளக்கம் தரும் பி.ஜே அவர்கள் 3:1 க்கு விளக்கமாக 29 அத்தியாயங்கள் பொருள் கூற முடியாத எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதாக விளக்கி(?) இருக்கிறார். இதற்குப் பெயர் விளக்கமா அல்லது மனக்குழப்பமா என்பதையும், குர்-ஆன் மொழிபெயர்ப்புப் பிழையா அல்லது பிழைத்திருத்தமா என்பதையும் அன்னார் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இ) முஹம்மதுவின் காலத்தில் அவருடன் இருந்த சஹாபாக்கள் எவரும் அவரை எதிர்த்தோ அல்லது ஏன் என்றோ கேள்வி கேட்கவில்லை என்பது, முஹம்மது அவர்கள் சொன்னதெல்லாம் சரி என்று அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதினால் என்பது அபத்தமான வாதம் ஆகும். ஏனெனில் ஏன் என்று கேட்டு எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அது மட்டுமல்ல முஹம்மது கல்வி அறிவற்றவர் என்பதையும் அவர்கள் நம்மை விட நன்கறிவார்கள். 

ஈ) பிஜே அவர்களின் விளக்கம் சுய முரண்பாடாக இருக்கிறது என்பதையும் அவருடைய மொழிபெயர்ப்பும் அவருடைய சொந்தக் கருத்தை உள்நுழைத்து இருக்கிறது என்பதையும் கண்டோம். அல்லாஹ்வைக் காப்பாற்றவும், குர்-ஆன் பிழையை மறைக்கவும் மதிப்பிற்குரிய பிஜே அவர்கள் முயற்சி செய்திருப்பதையும், ஆனால் அவருடைய விளக்கத்துக்கு மாறாக அதே ஸூராவின் முதல் வசனம் இருக்கிறது என்பதையும் நாம் காண்கிறோம்.

முடிவாக, குர்-ஆனில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் ஒரு மோசடி அரங்கேறி இருப்பதையும், அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களே அதன் உண்மையான மறைபொருளை விளக்கி உண்மையை நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல குர்-ஆன் எளிமையானது, தெளிவானது மற்றும் விளங்கக்கூடியது என்பது வெறும் பேச்சுதான், மார்க்கத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு தவறான மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கத்தைக் கொடுத்ததோடல்லாமல், மற்றவர்கள் இப்படி எல்லாம் சொல்வார்கள் என்று சொல்லிக் கொண்டு தன் மனதில் இருப்பதை பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தன் விளக்கக் குறிப்பு 2 மற்றும் 86ல் கூறி இருக்கிறார்: "முஹம்மதைப் பார்த்தீர்களா? அர்த்தமே இல்லாமல் உளறி விட்டு இறைவேதம் என்கிறார்'', 'முஹம்மது உளறுகிறார்.' வாசிக்கிறவர்கள் சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய முடிவுக்கே முடிவை விட்டு விடுகிறேன். சமயம் கிடைத்தால் இது போன்ற மற்ற குர்-ஆன் மொழிபெயர்ப்பு வசனங்களையும், ஏன் மூல அரபி வசனங்களையே ஆராய்ந்து பார்ப்போம்.

Books cited:

Dashti, Ali. Twenty Three Years: A Study of the Prophetic Career of Mohammad. Trans. F. R. C. Bagley. 1st edition. Costa Mesa, Calif.: Mazda Pub, 1994. Print.

அற்புதராஜ் அவர்களின் இதர ஆய்வு கட்டுரைகள்