பாகம் – 2: குர்-ஆன் தொகுப்பு - எழுத்துக்கு எழுத்து மாற்றமடையாத குர்-ஆன்!

(அப்துல்லாவும் அப்ரஹாமும் உரையாடல்)

[ சனிக்கிழமை இரவு 8:00 மணி, அப்துல்லா தன் நண்பன் அப்ரஹாமுக்கு டெலிபோன் செய்கின்றான். வேலை ஒன்றும் இல்லையானால், நாளை மாலை வீட்டிற்கு வருவாயா என்று அப்துல்லா கேட்கிறான். அப்ரஹாமும் வருகிறேன் என்றான். ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 5, அப்ரஹாம், அப்துல்லா வீட்டிற்குச் சொல்கின்றான், இனி அவர்கள் இருவர் உரையாடலை கேட்ப்போம். ]

அப்துல்லா: வாடா, வேத பண்டிதனே! வா! சரியான நேரத்திற்கே வந்துட்டியே? 

அப்ரஹாம்: நீ கூப்பிட்ட பிறகு கூட, லேட்டா வரமுடியுமா சொல்லு? 

அப்துல்லாவின் மனைவி: அண்ணா, வாங்க வாங்க, வீட்டு பக்கமே வருவதில்லையே நீங்க?

அப்ரஹாம்: ஒன்னும் இல்லேம்மா, கம்பனியிலே கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு, அதனாலே தான் வரமுடிகிறதில்லே.

அப்துல்லாவின் மனைவி: நீங்க பேசிகிட்டு இருங்க, இதோ, அஞ்சு நிமிஷத்திலே காபி கொண்டு வரேன்.

[ குறிப்பு: குர்-ஆன் படி ஒரு பெண், இப்படி மூன்றாம் நபர் (கணவரின் உயிர் நண்பனானாலும் சரி) முன்பு, "புர்கா" அணியாமல், சாதாரண உடையில் வரக்கூடாது. இருந்தாலும், இந்த குடும்பம் நட்பிற்கு இலக்கணமாக திகழுவதினால், இவர்கள் இப்படிப்பட்ட சட்டங்களை சீரியசாக எடுத்துக்கோள்வதில்லை. இதைப் பற்றி முஸ்லிம் அறிஞர்களுக்கு தெரிந்தால், உடனே அப்துல்லாவிற்கு எதிராக பத்வா போட்டுவிடுவார்கள்]

அப்துல்லா: டேய், நான் ரொம்ப நாளா குர்-ஆன், பைபிள் பற்றி சில செய்திகளை சேகரித்து வந்திருக்கேன். நான் சொல்லப்போகும் செய்திகள் கேட்டு, நீ அப்படியே திகைச்சிடுவே தெரியுமா?

அப்ரஹாம்: கேளுடா, கேளு. யார் திகைச்சி போவாங்க என்று அப்புறம் தெரியும்.

அப்துல்லா: முதல்லே, நான் குர்-ஆன் பத்தின பெருமையைச் சொல்வேன், பிறகு பைபிளைப் பற்றி சில முக்கியமான முரண்பாடுகள், பிழைகளைப் பத்தி கேள்வி கேட்பேன் சரியா?

அப்ரஹாம்: ரொம்ப சந்தோஷம். அப்படியே செய்வோம்.

[சூடான காபி வருகிறது, இருவரும் குடிக்கிறார்கள். அப்துல்லா தன் மனைவிக்கு ஒருமணி நேரம் கழித்து மறுபடியும், காபி கொண்டுவா என்று சொல்கிறான்.]

அப்ரஹாம்: ஏண்டா, ஒரு மணி நேரத்திலேயே மறுபடியும் காபி?

அப்துல்லா: எனக்கு இல்லேடா, உனக்குத் தான். நான் சொல்லப்போற செய்திகள் கேட்டு உனக்கு தலை சுத்துமில்லையா, அதுக்குத் தான், காபி.

அப்ரஹாம்: [அப்துல்லாவின் மனைவியை கூப்பிட்டு] ஏம்மா, இரண்டு கப் காபி, மற்றும் ஒரு "சாரிடன் மத்திரை" கூட. ஹா..ஹா.. ஹா... [ எல்லாரும் சிரிக்கிறார்கள் ]

அப்துல்லா: நான் சொன்னது போல, எங்கள் குர்-ஆன் பற்றிய பெருமையை நான் மொதல்ல சொல்லுவேன். இதோ பாரு

1. உலகத்திலேயே மாறாமல் இருக்கும் ஒரு வேதம், குர்-ஆன் தான்.

2. குர்-ஆனில் மட்டும் தான், ஒரு எழுத்து கூட, அல்லது ஒரு எழுத்தின் பகுதியோ மாறாமல் 1400 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.

3. குர்-ஆனில் ஒரு எழுத்து கூட்டவோ, குறைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை, அது மனிதர்களால் முடியாதும் கூட. காரணம், குர்-ஆனை பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியிருக்கிறார். அந்த பொறுப்பை அல்லாவே எடுத்துக்கொண்டார்.

4. இப்போது உலகத்தில் நம்மிடம் இருக்கும் குர்-ஆனும், நபி முகமது (அவர் மிது சாந்தி உண்டாகட்டும்) அவர்களுக்கு வஹி மூலம் இறக்கிய குர்-ஆனும், எழுத்துக்கு எழுத்து மாறாமல், கூட்டப்படாமல், திருத்தப்படாமல் அப்படியே உள்ளது.

இப்போ சொல்லு, இதுக்கு உன் பதில் என்ன? 

சொல்லு, காபி மற்றும் சாரிடன் இப்போதே கொண்டுவரச் சொல்லட்டுமா? ஹா...ஹா... ஹா... 

அப்ரஹாம்: அண்ணே! காபி இப்போ வேண்டாமண்ணே! அப்பறம் குடிக்கலாம். கம்ப்யூட்டரை ஆன் பண்ணு, ஒரு அரபிக் குர்-ஆனை கையில் எடுத்துக்கோள், இன்டெர்னெட் கன்னெக்ட் பண்ணு. இதெல்லாம் இப்போ நமக்கு தேவை. நான் சொல்லப்போற பதில், உன் எல்லா செய்திகளுக்கும் பதில் தரும்.

அப்துல்லா: ஒரு நிமிஷம் இரு, எல்லாம் ரெடியா வெச்சிகிறேன். [எல்லாவற்றையும் முடித்து விடுகிறான், அப்துல்லா] சரி, இப்போ சொல்லு உன் பதில். 

அப்ரஹாம்: முகமதுவின் வாழ்நாளிலெ, 23 ஆண்டுகளாக, குர்-ஆன் பகுதி பகுதியாக, சமயத்திற்கு ஏற்றது போல அல்லா முகமதுக்கு வஹி (மனதிலே அல்லா வசனத்தை போடுவது / காபிரியேல் தூதன் வந்து கொடுப்பது) மூலமாக இறங்கியது. சரி தானே?

அப்துல்லா: ரொம்ப சரி. மேலும் சொல்லு.

அப்ரஹாம்: முகமது மரிப்பதற்கு முன்பாக, அவர் கையிலே, இப்போது நம்மிடம் உள்ள குர்-ஆன் போன்று மொத்த வசனங்கள் அடங்கிய ஒரு மொத்த தொகுப்பு இருந்ததா என்று கேட்டால்? இல்லை என்பது தான் பதில். 

அவர் இருக்கும்போது குர்-ஆன் அதிகாரங்களாக, வசனங்களாக பிரிக்கப்படவில்லை. அதிகாரங்களாக பிரிக்காதது தவறு என்று நான் சொல்லவில்லை. நான் கேட்பது. நம்மிடம் உள்ள குர்-ஆனில் உள்ள எல்லா வசனங்களும் (அல்லது செய்தியும்)உள்ள ஒரு தொகுப்பு (அ லிருந்து ஃ (A-Z) வரை ), முகமதுவிடம் இருந்ததா? 

அப்துல்லா: இருந்தது. இதில் என்ன சந்தேகம்?

அப்ரஹாம்: இல்லை. முகமது இறந்தவுடன், மற்ற நட்டு அரசர்கள், தாங்கள் முகமதுவிற்கு பயந்து நம்பிக்கொண்டு இருந்த "அல்லாவை" விட்டு விட்டனர். வரியை கட்ட மறுத்தனர். இதை சரி செய்ய "அபு பக்கர்" (முகமதுவின் மாமனார், ஆயிஷாவின் தந்தை, முதல் காலிஃபா), பல முஸ்லீம்களை யுத்தத்திற்கு அனுப்பினார். அந்த யுத்தம் தான் "யமாமா" என்று அழைக்கப்படுகிறது. அந்த போரில், முகமதுவின் நெருங்கி வாழ்ந்த தோழர்கள்(சீடர்கள்), குர்-ஆனை மனப்பாடம் செய்தவர்கள், அதிகமான பேர் மரித்துவிட்டனர்.

இந்த புகாரி ஹதீஸை பார்

4679. ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார். 

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்: 

உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். 

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள். 

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். 

முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை. 

(அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129) 

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. 

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், '(அவ்விரு வசனங்கள்) 'குஸைமா'(ரலி) அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன' என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது. Volume :5 Book :65

அப்துல்லா: சரி, இந்த ஹதீஸ் மூலம் நீ என்ன சொல்ல நினைக்கிறே?

அப்ரஹாம்: இந்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்றால் :

1. குர்-ஆன் முகமது வாழும் காலத்தில், ஒரு தொகுப்பாக, புத்தகமாக ஆக்கப்படவில்லை.

2. குர்-ஆனில் வசனங்கள் சிலரின் மனதில் மனப்பாடமாகவும், சில வசனங்கள் தோல்களிலேயும், பேரிச்ச இலைகளிலேயும், இன்னும் பல விதங்களில் சேமித்துவைக்கப் பட்டதே தவிர, ஒரு தொகுப்பாக, ஒருவரிடம் எல்லா வசனங்களும் இல்லை.

3. ஒரு தொகுப்பு (எல்லா வசனங்களும்) அபு பக்கர், உமர் போன்றவர்களிடம் இருந்துயிருக்குமானால், ஏன் அவர்கள் யுத்தத்தில் மரித்த மனிதர்களுக்காக கவலைப்பட வேண்டும்? 

4. மனப்பாடம் செய்தவர்கள் (குர்ரா-Qurra) எல்லாரும் போரில் மரித்துவிட்டால், தங்களிடம் இருக்கும் வசனங்கள் (தோலில், இலைகளில்) வைத்துக்கொண்டு ஒரு முழு குர்-ஆனை தொகுக்க முடியாது என்பதால் அவர்கள் ஒரு குர்-ஆன் தொகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார்க்ள்.

5. ஏற்கனவே, ஒரு முழு குர்-ஆன் தொகுப்பு தங்களிடம் (தோலிலோ, இலைகளிலோ) இருந்துயிருந்தால், முகமது ஒரு முழு தொகுப்பை கொடுத்து சென்றுயிருந்தால், இவர்கள் ஏன் இத்தொகுப்பு வேலையை ஆரம்பிக்கவேண்டும்?

6. இப்படிப்பட்ட தொகுப்பு வேலையை, முகமதுவே செய்யும் படி கட்டளையிடவில்லை என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அப்படியானால், முகமது மரிக்கும் போது ஒரு புத்தகவடியில் அவரிடமெ ஒரு குர்-ஆன் இல்லை.

மேல் சொன்ன ஹதீஸில், அபு பக்கர், உமர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்.

…நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள்.….

இப்படி செய்யவில்லையானால்... சில காலத்திற்கு பின்பு நம்மிடம் "குர்-ஆன்" இருக்காது என்பது உமரின் எண்ணம். 

ஜையதின் தயக்கம் அல்லது எண்ணம்:

ஜையத் என்பவர் தான் முகமது குர்-ஆனை ஓதும் போது, அதை தோல்களிலும், இலைகளிலும் எழுதியவர். ஏன் ஜையத் இந்த தொகுப்பு வேலை ஒரு பெரிய மலை போன்றது என்கிறார்?

இன்றைய இஸ்லாமியர்கள், இன்னும் பல ஹதிஸ்கள் சொல்வதுபோல, பல பேர் குர்-ஆன் முழுவதும் மனப்பாடம் செய்துயிருந்தால், அல்லது தோல்களிலும், இலைகளிலும் முழு குர்-ஆனும் எழுதப்பட்டிருந்தால். ஜையத் இப்படி வேதனைபட்டிருக்க மாட்டார். தான் மனப்பாடம் செய்த எல்லா குர்-ஆன் வசனங்களும், எழுதிவிட்டு, மற்றவர்களை சரிபார்க்கும் படி சொல்லியிருப்பார், வேலை சுலமபாகியிருக்கும். இப்படி எல்லாரிடத்திலும் சென்று, தேடி, கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் இருந்தியிருக்காது. 

எனவே, உண்மை என்னவென்றால்:

1. ஒருவரும் குர்-ஆனை முழுவதுமாக ஒரு வார்த்தைவிடாமல், மனப்பாடம் செய்யவில்லை. நூறு சதவிகிதம்(100%) ஒருவரும் மனப்பாடம் செய்யவில்லை.

2. ஒரு நபித்தோழரிடமும், குர்-ஆனின் எல்லா வசனங்களும் தோல்களிலோ, இலைகளிலோ முழுவதுமாக இல்லை. 

3. முகமது மரிக்கும் தருவாயில், யாரிடமும், " ஒரு முழு குர்-அனை" கொடுத்துச் செல்லவில்லை. என்பது மிகத்தெளிவாகப் புரியும்.

அப்துல்லா: ஒருவேளை இந்த ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸாக இருக்கலாம்.

அப்ரஹாம்: நீ சொல்வது சரியானது இல்லை. உலக ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள், அறிஞர்கள் எல்லாம், குர்-ஆன் இப்படி தொகுக்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கின்றனர். இதில் எந்த கருத்துவேறுபாடுமில்லை. வேண்டுமானால், எல்லா இஸ்லாம் தளங்களிலும் சென்று "குர்-ஆன் தொகுக்கப்பட்ட விதம்" என்ற கட்டுரையை தேடிப் பார்.

அப்துல்லா: சரி, நீ சொல்வது ஏற்றுக்கோள்கிறேன், நம் நபி மரித்தபிறகு தான், குர்-ஆன் தொகுக்கப்பட்டது. ஆனால், அந்த தொகுப்பு ஒரு நல்ல படித்தவரிடம் தானே தொகுக்கும்படி ஒப்படைக்கப்பட்டது. அவர், மறுபடியும், எல்லா வசனங்களையும் தொகுத்துயிருப்பார் இல்லையா? அதில் ஒரு வசனம் கூட விடுபட்டுயிருக்காது இல்லையா? எனவே, இப்போது உள்ள குர்-ஆன் எல்லா வசனங்களையும் கொண்டுள்ளது என்று நிச்சயமாக சொல்லலாமே. 

அப்ரஹாம்: இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. கீழ கண்ட ஹதீஸ் சொல்கிறது. "யமமா" போரில் மரித்தவர்கள் மட்டுமே மனப்பாடம் செய்த சில வசனங்கள், அவர்கள் போரில் மரிக்கும் போது அவர்களோடு அழிந்துவிட்டது. 

அவ்வசனங்கள் தெரிந்தவர்கள் யாருமில்லை, அவ்வசனங்கள் தோல்களிலும், இலைகளிலும் எழுதப்படவில்லை. எனவே, குர்-ஆனின் சில வசனங்கள், யாருக்கும் தெரியாமலே அழிந்துவிட்டது. இந்த வசனங்களை, அபு பக்கரும், உமரும், உத்மானும் தொகுக்கவில்லை என்று சொல்கிறது இந்த ஹதீஸ். 

Ibn Abi Dawud, Kitab al-Masahif, p.23

Many (of the passages) of the Qur'an that were sent down were known by those who died on the day of Yamama ... but they were not known (by those who) survived them, nor were they written down, nor had Abu Bakr, Umar or Uthman (by that time) collected the Qur'an, nor were they found with even one (person) after them. (Ibn Abi Dawud, Kitab al-Masahif, p.23).

இப்னு அபூ தாவுத், கிதாப் அல் மஸாஹிப், பக்கம் 23

வஹியாக இறக்கப்பட்ட அனேக குர்-ஆன் வசனங்கள் யமாமா பொரின் போது மரித்தவர்களுக்கு தெரிந்து இருந்தது. . . .  அப்போரில் உயிர் தப்பியவர்களுக்கு அவ்வசனங்கள் தெரியாமல் போனது. அவ்வசனங்கள் எழுதப்பட்டும் இருக்கவில்லை. அவைகளை அபூ பக்கரோ, உமரோ அல்லது உஸ்மானோ தொகுத்த குர்-ஆனிலோ அவைகள் காணப்படவில்லை. அதற்கு அடுத்து ஒருவரிடமும் அவ்வசனங்கள் காணப்படவில்லை.

சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். யாராவது குர்-ஆனை எரித்தால் என்ன செய்வீர்கள்? 

அப்துல்லா: எரித்தவன் கதி அதோ கதி தான். சும்ம விட மாட்டோம்.

அப்ரஹாம்: அப்படியானால், இந்த புகாரி ஹதீஸை நீ தான் படிக்கனும்: 

4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 

ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். 

எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்துவிடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். Volume :5 Book :66

மூன்றாவது காலிபா உத்மான் ஆண்ட காலத்தில்(முகமது மரித்த 20 ஆண்டுகளுக்கு பின்பு), பல விதமான மொழிபெயர்ப்பு (வசனங்கள்) உள்ள குர்-ஆன் புழக்கத்தில் இருந்தது. இதனால், ஒவ்வொரு பகுதியிலிருந்து வருபவர்கள், தங்கள் குர்-ஆன் தான் சரியானது, மற்றவர்களுடையது தவறானது என்று சண்டையிடவே, உத்மான், அபூபக்கர் தொகுத்த குர்-ஆனை வரவழைத்து, அதில் சில மாறுதல் செய்து, வேறு ஒரு புதிய தொகுப்பை உருவாக்கி, அதில் பல பிரதிகள் எடுத்து, புழக்கத்தில் இருந்த மற்ற எல்லா குர்-ஆன்களையும் எரித்துவிடும்படி உத்மான் கட்டளையிட்டார். 

நான் என்ன சொல்ரேன் என்றால்... 

அப்துல்லா: நீ ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு. [அப்துல்லா மனைவி வருகிறாள்]

அப்துல்லாவின் மனைவி: என்ன உங்க இரண்டுபேரோட பேச்சு முடிஞ்சுதா? அப்ரஹாம் அண்ணா, நான் காபி கொண்டுவரட்டுமா?

அப்துல்லா: அவனுக்கு காபி, கீபி ஒன்னும் வேண்டாம். எனக்கு மட்டும் ஒரு கப் காபி கொண்டுவா..... அதோட, இன்னும் 15-20  நிமிஷத்திலே நிறைய முந்திரி பருப்பு போட்டு, பால் பாயாசம் செய்து கொண்டுவா இவனுக்கு பாயசமுன்னா இவனுக்கு ரொம்ப இஷ்டம்.

அப்துல்லாவின் மனைவி: உங்களுக்கு சாரிடன் மாத்திரை கொண்டுவரட்டுமா? ஹா... ஹா... ஹா...

அப்துல்லா: உன் அண்ணனுக்கும், உனக்கும், நக்கல் அதிகம்.

அப்ரஹாம்: நான் இன்னும் உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லையே!?

அப்துல்லா: இன்னிக்கு இது போதும், அடுத்த வாரம் பேசலாம். இன்னும் அதிகமா கத்துகிட்டு வரேன். உன் தோலை அன்னிக்கு நான் உரிக்கிறேன்.

அப்ரஹாம்: அடுத்த வாரம் 5 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துடு. ஒரு புது ஸ்வீட் செஞ்சி உனக்கு குடுக்கனும்னு, உன் தங்கச்சி ஆசைபடுது. பாவம் நீ என் மனைவியின் கையால் அதுவும் புது ஸ்வீட் சாப்பிடப்போறே. கர்த்தர் தான் காப்பாத்தனும்.

[சிறிது நேரத்திற்கெல்லாம், பாயாசம் மனக்க மனக்க வருகிறது. அதுவும் முஸ்லீம் கையால் செய்தது. அதை சாப்பிட்டு விடைபெற்றுச் செல்கிறான், அப்ரஹாம். 

அடுத்த வார உரையாடலில், அப்ரஹாம் இப்போது உள்ள குர்-ஆன் சம்மந்தப்பட்ட சில செய்திகளைச் சொல்வான். மற்றும் அப்துல்லா, பைபிளின் வரலாற்றுப் பற்றி, தொகுக்கப்பட்ட முறைபற்றிப் பேசுவான்.]

[தேதி: 18 ஜூலை 2015 - இந்த கட்டுரை 2007ம் ஆண்டு ஈஸா குர்-ஆன் ஜியோசிடி தளத்தில் பதிக்கப்பட்டிருந்தது, இப்போது இந்த தளத்தில் மறுபதிவு செய்யப்படுகின்றது.]


அப்துல்லாஹ் மற்றும் அப்ரஹாமின் இதர உரையாடல்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்