குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்

முன்னுரை: பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆன் பற்றி கூறும் போது, "குர்‍ஆன் ஒரு அற்புதம், அரபி இலக்கிய நூல்களில் குர்‍ஆன் போன்றதொரு புத்தகம் இல்லை" என்பார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, குர்‍ஆன் போன்ற ஒரு புத்தகம் உலகில் வேறு எதுவும் இல்லை என்றும், குர்‍ஆனின் ஒவ்வொரு வசனமும், வார்த்தையும் எழுத்தும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளது. குர்‍ஆனில் ஒரு பிழையையும் நாம் காணமுடியாது என்று பலவாறு கூறுவார்கள். 

இவைகளை கேட்கின்ற பாமர இஸ்லாமியர்கள் பெருமிதம் கொள்வார்கள், அதே சமயத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் "அப்படியா" என்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், இந்த இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உண்மையா? குர்‍ஆன் மாற்றப்படாமல் அப்படியே உள்ளதா? குர்‍ஆனில் பிழைகள் எதுவும் இல்லையா? என்று நாம் கேட்டு, சிறிது நேரம் எடுத்து ஆராயும் போது, பீஜே போன்றவர்கள் சொல்வது உண்மையல்ல, அவைகள் பொய்கள் என்பது புரியும். 

சரி, இந்த தற்போதைய கட்டுரையில், இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆனில் உள்ள பிழைகளை எப்படி திருத்துகிறார்கள் அல்லது சரி செய்ய முயற்சி எடுக்கிறார்கள் என்பதை "குர்‍ஆன் 35ம் அதிகாரம், 8ம் வசனத்தைக் கொண்டு" நாம் பார்க்கலாம்.

1) குர்‍ஆனை தமிழாக்கம் செய்யும் போது, மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுக‌ள்: 

குர்‍ஆனை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது, வசனத்தின் பொருள் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக, மொழியாக்கம் செய்பவர்கள் அல்லது தமிழாக்கம் செய்பவர்கள், வசனங்களின் மத்தியில் சில அடைப்புக்குறிகள் "()" இட்டு, அதில் சில சொந்த வார்த்தைகளை எழுதுவார்கள், இதனால் தமிழில் நாம் குர்‍ஆன் வசனத்தை படிக்கும் போது, பொருள் விளங்கும். இப்படி செய்வது தவறு அல்ல. இப்படி அடைப்புகுறிகள் கொடுத்து விளக்குவது வசனங்களின் பொருளை சரியாக உணர உதவும். 

ஆனால், இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போவது என்னவென்றால், "அல்லாஹ் ஒரு வாக்கியத்தை சரியாக முடிக்காமல், அதாவது பாதியிலேயே அந்த வாக்கியத்தை அறைகுறையாக விட்டுவிட்டு, அடுத்த வாக்கியத்திற்குச் சென்றுள்ளார்" என்பதாகும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய மொழியாக்கம் செய்பவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைக் காண்போம்.

2) குர்‍ஆன் 35:8ம் வசனம் பீஜே தமிழாக்கத்திலிருந்து: 

இந்த குர்ஆன் வசனத்தை நாம் அனேக (ஒன்பது) தமிழாக்கங்களில் படிக்கப்போகிறோம். அதற்கு முன்பாக பீஜே அவர்கள் எப்படி இந்த வசனத்தை மொழியாக்கம் செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.

குர்ஆன் 35:8 

யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

மேற்கண்ட வசனத்தை நாம் மூன்றாக பிரிக்கலாம்: 

1) யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? 

2) தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். 

3) (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன் 

மேலே நாம் காண்பது போல, முதல் வாக்கியம் ஒரு கேள்வியாக உள்ளது, அதாவது ஒரு மனிதன் தான் செய்யும் தீய செயல்கள் நல்லவைகளாக காண்கிறானோ, அவன் எப்படி ஒரு சொர்க்கவாசியாக இருக்கமுடியும்? என்பது போல கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகம், அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுகிறார், எப்படி வழி கேட்டில் விடுகிறார் என்பதைச் சொல்கிறது. மூன்றாவதாக, முஹம்மதுவிற்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது. 

இப்போது, மேற்கண்ட மூன்று விவரங்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகம் பற்றி நாம் அலசப்போவதில்லை. ஆனால், முதல் பாகத்தைப் பற்றி பார்க்கப்போகிறோம். 

முதல் பாகத்தை பீஜே அவர்கள் கீழ்கண்டவிதமாக மொழியாக்க‌ம் செய்துள்ளார்கள்:

"யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)?"

3) அறைகுறை வாக்கியம்: 

இந்த வசனத்தில் முதல் பாகத்தில் ஒரு தீயவனை பற்றி பேசி, அவனை நல்லவவோடு/நல்லவற்றோடு ஒப்பிட்டு வாக்கியத்தை முடிக்கவேண்டும். ஆனால், அல்லாஹ் முதல் வாக்கியத்தில் பாதியை அடைந்தவுடன், நல்லவனை ஒப்பிட்டு பேசுவதை மறந்துவிட்டார். இதனால், வாக்கியத்தை "அவனா?" என்ற வார்த்தையோடு அறைகுறையாக விட்டுவிட்டு, "தான் நாடியோரை நல்லவழியில் செலுத்துவார்..." என்ற வாக்கியத்தை ஆரம்பித்துவிட்டார். 

இதனால் மொழியாக்கம் செய்பவர்கள் அல்லாஹ் செய்த பிழையை சரி செய்கிறார்கள்.  அல்லாஹ் சொல்ல தவறிய விவரத்தை இவர்கள் மொழியாக்கத்தில் சேர்கிறார்கள். 

இந்த வசனத்தில் பீஜே சேர்த்த "(சொர்க்கவாசி)" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வாசியுங்கள். இந்த வாக்கியம் அறைகுறையாக முழுமையடையாமலிருப்பதை காணலாம்.

குர்ஆன் 35:8 

யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா? 

தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். 

(முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

பீஜே அவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையில் இருக்கும் பிழையை "சொர்க்கவாசி" என்ற வார்த்தையை அடைப்பிற்குள் எழுதி, வாக்கியத்தை முழுமை படுத்தினார். 

பீஜே "(சொர்க்கவாசி)?" என்று சேர்க்கவில்லையானால், அந்த வசனம் "அவனா?...." என்பதோடு நின்றுவிடும். அவ்வாக்கியத்திற்கு பொருள் இருக்காது அல்லது அறைகுறையான வாக்கியமாக இருக்கும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய பீஜே அவர்கள் "சொர்க்கவாசி" என்ற வார்த்தையை சேர்த்தார். இதே போல தமிழில் குர்‍ஆனை மொழியாக்கம் செய்த இதர இஸ்லாமிய அறிஞர்கள் இந்த குர்‍ஆனின் பிழையை எப்படி சரி செய்து, அல்லாஹ்விற்கு உதவினார்கள் என்பதை அவர்களின் மொழியாக்கங்களிலிருந்து குர்‍ஆன் 35:8ம் வசனத்தை இப்போது காண்போம்.

4) இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிக்கேஷர்ஸ் & புக் செல்லர்ஸ்: 

இந்த தமிழாக்கத்தை செய்தவர்கள், அல்லாஹ்வின் பிழையை சரி செய்ய "(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)" என்று சேர்த்துள்ளார்கள். (பீஜே ஒரே வார்த்தையை பயன்படுத்தி சரி செய்துள்ளார்கள்). இவர்களும் தங்கள் வார்த்தைகளை அடைப்புகுறிக்குள் எழுதியுள்ளார்கள், ஏனென்றால், அந்த விளக்கம் குர்‍ஆனில் இல்லை.

எனவே எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாக காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாக காண்கிறாரோ அவரா?(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)ஆகவே நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோரை வழி தவறச் செய்கிறான் இன்னும் தான் நாடியோரை நேர் வழியில் செலுத்துகிறான்.எனவே அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்-நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை அறிந்தவன்.

5) குர்ஆன் தர்ஜுமா, திரியெம் பிரிண்டர்ஸ்: 

இவர்கள் தங்கள் தமிழாக்கத்தில் "(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?)" என்று எழுதி குர்‍ஆனின் பிழையை சரி செய்துள்ளார்கள்.

எனவே, எவனொருவனுடைய தீயசெயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை)அவனும் அழகானதாகவும் கண்டானே அவனா? (நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?) நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோரை வழி தவறச் செய்கிறான் இன்னும் தான் நாடியோரை நேர் வழியில் செலுத்துகிறான்.எனவே அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்-நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை முற்றும் அறிந்தவன்.

6) தர்ஜுமா அல்குரானில் கரீம் வெளியீடு பஷரத் பப்ளிக்கேஷன்: 

இவர்கள் தங்கள் தமிழாக்கத்தில் "(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்)" என்று எழுதி குர்‍ஆனின் பிழையை சரி செய்துள்ளார்கள்.

எனவே எவனொருவன் அவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா?(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்).நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை வழிதவறச்செய்கிறான்.தான் நாடியவர்களை நேரான வழியில் நடத்துகிறான்.ஆகவே (நபியே) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தோனாக இருக்கின்றான்.

7) திருக்குரான் ,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (ஐ எஃப் டி): 

இந்த தமிழாக்கத்தை தந்தவர்கள், சிறிது மாற்றி "அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா? " என்று எழுதியுள்ளார்கள். மற்ற நல்ல மனிதனோடு ஒப்பிடாமல், பீஜேயைப் போன்று, எழுதியுள்ளார்கள். இவைகளை நாம் கவனித்தால், அல்லாஹ் பிழையாக செய்து வைத்துச் சென்றதை, ஒவ்வொரு மொழிப்பெயர்ப்பாளரும், தங்கள் சொந்த கருத்தை சொல்லி, அந்த குர்‍ஆன் பிழையை சரி செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

எந்த மனிதனுக்கு அவனுடைய தீயச்செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக்கொண்டிருகின்றானோ(அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா?) திண்ணமாக அல்லாஹ் தான் நாடுவோரை நெறிபிறழச்செலுத்துகிறான்.மேலும் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்.எனவே (நபியே)இவர்களுக்காகத் துக்கமும் வேதனையும் அடைந்தே உமது உயிர் உருகிப் போய்விட வேண்டாம்.

8) திருக்குரான்,இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிக்கேஷன்ஸ் லிட்: 

இவர்களின் குரானில் இது ஒன்பதாவது வசனம். பிஸ்மில்லாவையும் ஒரு வசனமாக கணக்கிட்டு எண்கள் போடப்பட்டுள்ளது. இது "அஹமதியா" என்ற இஸ்லாமிய பிரிவினரால் தமிழாக்கம் செய்யப்பட்ட குர்‍ஆன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் "(நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?)" என்று எழுதி அல்லாஹ்வின் பிழையை திருத்த முயற்சி செய்துள்ளார்கள்.

35:9 தனது செயலின் தீமை தனக்கு கவர்ச்சிமிக்கதாக ஆக்கப்பட்டு தானும் அதனை அழகானதென்று காண்பவன் (நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்புபவனை வழிக்கேட்டில் செல்ல விடுகிறான்.தான் விரும்புபவனை நேர்வழியில் நடத்துகின்றான்.எனவே அவர்களுக்காக வருந்தி உமது உயிர் அழிந்துவிட வேண்டாம்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு அறிபவனாவான்.

9) மதினாவிலுள்ள மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகத்தில் ஹிஜ்ரீ 1425ம் ஆண்டு அச்சிடப்பட்டது: 

இந்த குர்‍ஆன் சௌதியில் உள்ள மதினாவில் அரசாங்கத்தால் பதிக்கப்படுகிற குர்‍ஆன் தமிழாக்கமாகும். இதில் கூட அடைப்பிற்குள் "(இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)" என்ற வார்த்தைகளை சேர்த்து அல்லாஹ்வின் அறியாமையை போக்கியுள்ளார்கள்.

எனவே, எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாகக் காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாகக் காண்கிறாரோ அவரா? (இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)ஆகவே, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான்; தான் நாடியவர்களை நேரான வழியிலும் செலுத்துகிறான்; ஆகவே, (நபியே) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்; நிச்சயமாக , அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்

10) சங்கைமிகு குர்‍ஆன் - ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்: 

இந்த மொழிப்பெயர்ப்பாளர், கொஞ்சம் வார்த்தைகளை தாரளமாகவே பயன்படுத்தியுள்ளார். அதாவது " (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்)" என்று எழுதியுள்ளார். அதாவது 'அல்லாஹ் கேள்வி கேட்பது போல' வசனம் உள்ளது, அதில் முதல் பாகத்தில் பாதி கேள்வியோடு அல்லாஹ் விட்டுவிட்டார், ஆனால், இந்த மொழிப்பெயர்ப்பாளர், அல்லாஹ்வின் கேள்வியை பூர்த்தி செய்து, அதற்கான பதிலையும் தானே கொடுத்து காரியத்தை கச்சிதமாக முடித்துள்ளார்.

எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

11) முஹம்மது ஜான் தமிழாக்கம்: 

இந்த தமிழாக்கத்தில் "(நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)" என்று எழுதி வாக்கியத்தை சரி செய்துள்ளார்கள்.

எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதை அழகாகக் காண்கிறானோ, அவன் (நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்படவேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.

12) ஒன்பது தமிழ் குர்‍ஆன் மொழியாக்கங்களிலிருந்து மேற்கோள்கள்: 

இதுவரை நாம் ஒன்பது தமிழ் குர்‍ஆன்களிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளோம். எல்லாரும் தங்கள் சொந்த கருத்தை சொல்லியுள்ளார்கள். எல்லாரும் தங்கள் சொந்த கருத்தை அடைப்புகுறிக்குள் கொடுத்துள்ளார்கள். இவர்கள் எல்லாருக்கும் அரபியில் உள்ள வசனத்தின் பிழை தெரிந்துள்ளது, அதனை சரி செய்ய, பிழையான அறைகுறை வாக்கியத்தை சரி செய்ய இவர்கள் முயன்றுள்ளார்கள். 

இந்த ஒன்பது பேர் அடைப்பிற்குள் எவைகளை சேர்த்து பிழையான வாக்கியத்தை சரி செய்துள்ளார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவனை சுருக்கமாக காட்டும்:

 

எண் குர்-ஆன் தமிழாக்கம்அல்லாஹ்வின் பிழையை சரி செய்வதற்கு,
 முஸ்லிம்கள் குர்-ஆனில் சேர்த்த வார்த்தைகள்
1.பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்(சொர்க்கவாசி)?
2.இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிக்கேஷர்ஸ் & புக் செல்லர்ஸ்(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)
3.குர்ஆன் தர்ஜுமா,திரியெம் பிரிண்டர்ஸ்(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?)
4.தர்ஜுமா அல்குரானில் கரீம் வெளியீடு பஷரத் பப்ளிக்கேஷன்(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்)
5.திருக்குரான் ,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (ஐ எஃப் டி)அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா?
6.திருக்குரான்,இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிக்கேஷன்ஸ் லிட்(நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?)
7.மதினாவிலுள்ள மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகத்தில் ஹிஜ்ரீ 1425ம் ஆண்டு அச்சிடப்பட்டது(இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)
8.சங்கைமிகு குர்‍ஆன் - ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்(எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்)
9.முஹம்மது ஜான் தமிழாக்கம்(நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளபடி, குர்ஆன் தமிழாக்கத்தில் இவர்கள் புதிதாக சேர்த்த வார்த்தைகள், ஏற்கனவே இருக்கும் அரபி வார்த்தைகளுக்கு அதிகபடியான விளக்கம் தருவதற்காக அல்ல, அதற்கு மாறாக, பிழையாக உள்ள வாக்கியத்தில் அல்லது அறைகுறையாக விடுபட்ட வாக்கியத்தை சரி செய்ய இவர்கள் எடுத்த முயற்சி தான் இந்த குறிப்பிட்ட (35:8) வசனத்தின் இடையில் போடப்பட்ட மேற்கண்ட வார்த்தைகளாகும். ஒவ்வொரு மொழிப்பெயர்ப்பாளரும் தனக்கு தோன்றியபடி, விளக்கம் கொடுத்துள்ளார்கள். எல்லாருடைய விளக்கமும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை கவனிக்கவும். 

முடிவுரை: 

பீஜே கூறுவது போல குர்‍ஆன் ஒரு பிழையற்ற வேதமல்ல. அல்லாஹ் செய்த பிழையை மனிதன் திருத்தும்படி அல்லாஹ் தம் வேதத்தை விட்டுவிட்டார். இது ஒன்று மட்டுமல்ல இது போல அனேக பிழைகள், இலக்கண பிழைகள் குர்‍ஆனில் (மூல குர்‍ஆனில்) உண்டு. கர்த்தருக்கு சித்தமானால் நாம் அவைகளை பிறகு காண்போம்.

குர்‍ஆன் பற்றிய இதர தமிழ் கட்டுரைகள்:

1) வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல் 

2) ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! 

3) குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் 

4) குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? 

5) பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN) 

6) ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌ 

7) விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்? 

8) இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம் 

9) அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்? 

சமர்கண்ட் மூல குர்‍ஆன் (MSSவுடன்) இன்றைய குர்‍ஆன் (1924 எகிப்திய வெளியீடு) ஒப்பீடு 

10) பின் இணைப்பு A - பாகம் 1 (Appendix A1) 

11) பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2) 

12) பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3) 

13) பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)

மூலம்: http://isakoran.blogspot.in/2011/09/358.html

பீஜே அவர்களுக்கு மறுப்புக்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்