கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு

நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல்

கற்பனை நாடகம்: இது ஒரு கற்பனை நாடகம் ஆகும். இயேசுவின் சீடர்களில் பலர் இதில் நடிப்பவர்களாக நான் கற்பனை செய்துள்ளேன். இந்நாடகம் நடக்கும் இடம் ஒரு "முஸ்லீம் நாடாகும்". முகமதுவின் காலத்திற்கு பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து இது நடக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். முகமதுவின் காலத்திற்கு பின்பு அவரது தோழர்கள் நாடுகளை ஆட்சி செய்தார்கள். அவர்களை "காலிஃபா" என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு காலிஃபாவின் ஆட்சி காலத்தில் இந்த உரையாடல் அல்லது நாடகம் நடப்பதாக நாம் கற்பனை செய்துக்கொள்ள வேண்டும். 

இந்த அரசர் ஆட்சி செய்யும் போது, அந்த நாட்டில் கீழ் கண்ட இயேசுவின் சீடர்கள் சுவிசேஷம் சொல்லும் போது, கைது செய்யப்படுகிறார்கள், காவலில் வைக்கப்பட்டார்கள். இயேசுவின் இந்த சீடர்கள் அக்காலத்தில் உயிரோடு இருப்பதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

1. பேதுரு - (தனக்கு அடுத்து தன் ஆடுகளை மேய்க்க இயேசு நியமித்த மிக நம்பிக்கையான சீடர் .) 

2. பவுல் - (இயேசு இவரை சந்திக்கிறார், இவர் மூலமாக பலமான ஊழியம் நடைபெறுகிறது. இஸ்லாமியர்கள் இவர் மீது வைக்கும் குற்றங்களுக்கு இவர் பதில் அளிக்கப்போகிறார். ) 

3. யோவான் - (இயேசுவிற்கு அன்பாக இருந்த சீடன், யோவான் சுவிசேஷம், வெளிப்படுத்தின விசேஷம் தரிசனம் பெற்றவர், 1,2,3 யோவான் புத்தகத்தை எழுதியவர். ) 

4. லூக்கா - (லூக்கா சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் என்ற இரண்டு புத்தகங்களை எழுதியவர். இவர் ஒரு மருத்துவர். ) 

முதலாவது, பேதுரு அரச சபைக்கு நியாயம் விசாரிக்க அழைக்கப்பட்டார். பேதுரு அரசருக்கும், மற்ற சபை அங்கத்தினர்களுக்கும் முன்பாக நிற்கிறார். இஸ்லாமிய அரசர் கேட்கும் கேள்விகளுக்கு பேதுரு பதில் அளிக்கிறார். 

இந்நாடகத்தின் அடுத்த பாகத்தில் பவுலை அழைத்து அவ்வரசர் கேள்வி கேட்கிறார். இப்படி மற்ற சீடர்களையும் அழைத்து பேசுவதை மற்ற பாகங்களில் பார்க்கலாம். 

பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு

இடம்: ஒரு இஸ்லாமிய அரச சபை

நபர்கள்(நடிகர்கள்): ஒரு இஸ்லாமிய அரசர், சபை அங்கத்தினர்கள் மற்றும் இயேசுவின் சீடன் சீமோன் பேதுரு. 

[சீமோன் பேதுரு சங்கிலிகளால் கட்டப்பட்டு அரச சபையின் நடுவில் நிற்கிறார், அரசரும் மற்றவர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்] 

அரசர்: நீங்கள் நான்கு பேரும் எங்கே இருந்து வருகிறீர்கள்? எங்கள் நாட்டில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்? 

பேதுரு: நாங்கள் இஸ்ரவேல் நாட்டிலிருந்து வருகிறோம். நாங்கள் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் நற்செய்தியை உங்கள் நாட்டு மக்களுக்கு சொல்லும்படி நாங்கள் வந்தோம். 

அரசர்:  ஓ, நீங்கள் தான் வேதம் கொடுக்கப்பட்டோர்களா? 

பேதுரு: ஆம், நாங்கள் மாத்திரம் தான் வேதம் கொடுக்கப்ப்ட்டோர்கள். 

அரசர்: உனக்கு ஆணவமா? நாங்கள் மாத்திரம் தான் வேதம் கொடுக்கப்பட்டோர்கள் என்று பயமில்லாமல் சொல்கிறாய். 

பேதுரு: ஆணவம் இல்லை அரசே, அதிகாரம். இயேசு எங்களுக்கு கொடுத்த அதிகாரம். 

அரசர்: உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை நான் தர விரும்புகிறேன். குர்‍ஆன் சொல்கிறது, இயேசு(PBUH) தேவகுமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி என்று மட்டும் தான். எனவே, கடைசி நபியாகிய முகமது(அவர் மீது சாந்தி உண்டாவதாக- PBUH) கொண்டு வந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நல்லோர்களில் ஒருவராக எண்ணப்படுவீர்கள். இயேசு(PBUH) தான் இறைவன் என்பதை பிரசங்கிப்பதை இனி விட்டுவிடுங்கள். 

பேதுரு: அருமை இராஜாவே, உங்கள் பரிவிற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இயேசு தான் இறைவன் என்று உலகமெங்கும் பிரசங்கிப்பதை எங்களால் நிறுத்தமுடியாது. ஏனென்றால், இயேசு தான் உண்மை தெய்வம். அவரே நமக்காக ஏன் உங்களுக்காகவும், உங்கள் நாட்டு மக்களுக்காகவும் மரித்தார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மறுபடியும் வரப்போகிறார். எனவே, அவரை மட்டுமே நாங்கள் விசுவாசிக்க வேண்டும். எனவே, உங்கள் வழிகளை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றும் படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். 

அரசர்: அப்படியா! முதலாவது என் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியுமானால் சொல். இயேசுவை(PBUH) அல்லா அப்படியே தன் அளவில் எடுத்துக்கொண்டார், அவர் சிலுவையில் மரிக்கவில்லை, மக்களுடைய கண்களை ஏமாற்றி, இயேசுவைப் (PBUH) போல "ஒரு நபரை" அல்லா காட்டினார். மக்கள் எல்லாரும், ஏன் அவருடைய தாயாரும் கூட சிலுவையில் அறையப்பட்டது இயேசு என்று நினைத்துக்கொண்டார்கள், நீங்களும் அப்படியே எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அவ்வளவு தான். பின் ஏன் நீ இயேசு(PBUH) மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்று பொய் சொல்கிறாய். 

பேதுரு: அரசரே மறுபடியும் உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு வேளை நீங்கள் சொல்வது உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி நடந்ததாக ஒரு ஆதாரமும் இல்லை. 

இயேசுவை அல்லா தன் அளவில் எடுத்துக்கொண்டார், அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை சிலுவையில் காட்டினார் என்று யாருக்கு தெரியும்? அல்லா எங்களுக்குச் சொன்னாரா? அல்லது இயேசுவிற்கு முன்பே அதை தெரிவித்து எங்களுக்கு சொல்லும்படி சொன்னாரா? இல்லையே? மூன்று வருடங்களுக்கு அதிகமாக நாங்கள் அவரோடு இருந்தோமே! இதைப் பற்றி அல்லா இயேசு மூலமாக எங்களுக்குச் சொல்லியிருக்கலாம் அல்லவா? அல்லது எதிர் காலத்தில் இயேசுவை மரிக்கச்செய்யாமல் அல்லா எடுத்துக்கொள்ளப்போவது அல்லாவிற்கே தெரியாமல் போனதா? 

எல்லாம் முடிந்த பிறகு, நாங்கள் உலகமெல்லாம் சுற்றி, பசியிலும், தாகத்திலும், வெயிலிலும், குளிரிலும் கஷ்டப்பட்டு, இயேசுவின் நற்செய்தியை சொல்லும் போது, 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்து, மரித்தது இயேசு அல்ல, அவரைப் போலவே வேறு ஒருவர் என்றுச் சொன்னால், இது அல்லாவிற்கு நியாயமாக படுகிறதா, சிந்தித்துப்பாருங்கள். 

நான் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை அறியாமல் என் தொழிலுக்கு திரும்பினேன், மீன் பிடிக்கச்சென்றேன். மற்ற இயேசுவின் சீடர்களும் மீன் பிடிக்க வந்தார்கள். ஆனால், இயேசு எங்களுக்கு தரிசனமாகி தன்னை உயிருள்ளவராக காண்பித்தார்(யோவான் 21:3‍-14). 

இராஜாவே, நான் சொல்வதை கேளுங்கள், நீங்கள் சொல்வது உண்மையானால், எனக்கு தரிசனமானவர் யார்? எங்கள் கண்களுக்கு முன்பாக வானத்தில் உயர எடுத்துக்கொள்ளப்பட்டவர் யார்? இரண்டு தேவ தூதர்கள் இயேசு மறுபடியும் வருவார்கள் என்று சொன்னார்களே.  

அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று,11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் ( அப் 1: 10). 

எனவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன். 

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை(அப் 4: 12). 

...நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்(அப் 2:38 ) 

இதர சபை அங்கத்தினர்கள் சத்தமாய்: யாரிடம் என்ன பேசுகிறாய் என்று உனக்கு தெரியுமா? நீ அரசருக்கு மதிப்பு கொடுக்கமாட்டாயா? அரசே, இவனை பேசவிடாதீர்கள். 

பேதுரு: அரசரே, நான் உங்களை அவமதிக்கவில்லை. நான் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமல் இருக்கக்கூடாதே. அது என் மேல் விழுந்த கடமை. 

[அரச சபையில் அதிக சத்தம் எழுகிறது, அரசர் ஒரு முறை எல்லாரையும் பார்க்கிறார், உடனே சபையில் அமைதி நிலவுகிறது] 

அரசர்: பேதுருவே, நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அமைதியை அதிகமாக விரும்புவதால், உங்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். நீங்கள் எங்கள் நாட்டில் இருக்கலாம். ஆனால், இயேசு(PBUH) இறைமகன் என்று சொல்லக்கூடாது. ஏதாவது என் ஆட்சிக்கு விரோதமாக மக்களை கூட்டி, குழப்பம் செய்வீர்களா? அப்படி குழப்பம் செய்தால், தண்டனை மிகவும் கடினமாக இருக்கும். 

பேதுரு:  அரசே, எங்களால் இயேசு இறைமகன் என்று சொல்லாமல் இருக்கமுடியாது. இன்னொறு விவரத்தை நான் சொல்ல எனக்கு அனுமதி கொடுங்கள். நாங்கள் இந்த உலக சொத்துக்களுக்கு, ஆசைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் இல்லை, நாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எங்களை ஆளுபவர்கள் கிறிஸ்தவரல்லாதவராக இருந்தாலும், அவரை எதிர்க்க மாட்டோம். வாழும் தாய் நாட்டிற்கோ அல்லது எங்களை வாழவிட்ட நாட்டிற்கோ நாங்கள் என்னாலும் கெடுதல் நினைக்கமாட்டோம். அப்படி செய்பவன் இயேசுவின் சீடன் கிடையாது. நாங்கள் அரசியல் பண்ண அழைக்கப்படவில்லை, தேவ அரசைப் பற்றி அறிவிக்க அழைக்கப்பட்டோம். ஆட்சியை கவிழ்த்து நாற்காலிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் இல்லை. 

அரசர்: என் நாட்டில் இருக்கவேண்டுமானால், ஒன்று நீங்கள் முஸ்லீமாக மாறவேண்டும், அல்லது ஜிஸ்யா என்னும் வரியை செலுத்தவேண்டும். 

பேதுரு:  அரசே, நாங்கள் இந்நாட்டில் இருக்கும் நாட்கள் வரை, வரி கட்ட தயாராக இருக்கிறோம். 

[அரசர் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார், அந்த நேரத்தில் அரச சபையின் பெரியவர்களில் ஒருவர், அரசரிடம் வந்து, எதோ அவரிடம் சொன்னார்] 

அரசர்: இயேசுவின்(PBUH) சீடர்கள் அனைவருக்கும் நீ தான் தலைவராமே? உண்மையா? தலைவராவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? 

பேதுரு:  தலைவர் என்று தனியாக ஒரு பட்டத்தைச் சொல்லமுடியாது அரசே, ஆனால், இயேசு தன் ஆடுகளை மேய்க்கும்படிக்கும், பார்த்துக்கொள்ளும்படிக்கும் எனக்கு அதிகாரம் கொடுத்துள்ளார். என் அதிகாரம் வானத்தையும், பூமியையும் படைத்தவரிடமிருந்து வந்துள்ளது. 

இயேசு என்னிடம் அன்பாக இருக்கிறாயா? என்று மூன்று முறை கேட்டார். நானும் அன்பாக இருக்கிறேன் என்றுச் சொன்னேன். அப்படியானால், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று எனக்கு கட்டளையிட்டார்(யோவான் 21:15-17). எனவே தான் அரசே, என்னால் இயன்ற அளவிற்கு நான் இயேசுவின் நற்செய்தியை சொல்கிறேன். இயேசுவின் ஆடுகளில் நானும் ஒரு ஆடாக இருந்து மற்ற ஆடுகளை பார்த்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன். 

இயேசு எனக்கு பண ஆசை காட்டியோ, பெண் ஆசை காட்டியோ அல்லது மண் ஆசை காட்டியோ எனக்கு கட்டளையிட்டு இருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவருக்கு ஊழியம் செய்து இருக்கமுடியாது, இவ்வளவு பாடுகளை சகித்து இருக்கமுடியாது. ஆனால், இயேசு தன் மீது அன்பு இருந்தால், என் ஊழியம் செய் என்றார். அவர் மீது வைத்த அன்பு மட்டும் தான் எங்களை இப்படி செய்ய ஊக்குவிக்கிறது அரசே. 

அரசர்: இறைவனுடைய வழியை கெடுக்க வந்த "பவுலை" நீ ஆதரிக்கிறாயே! அவன் ஒரு எமாற்றுக்காரன் என்று உனக்கு தெரியாதா? பொய்யான உபதேசங்களைச் சொல்லி வரும் அவனை எதை ஆதாரமாக வைத்து உன்னோடு சேர்த்துக்கொண்டாய்? 

பேதுரு:  மன்னிக்கவேண்டும் அரசே, யார் உண்மை சொல்பவர்கள், யார் பொய் சொல்பவர்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும் அரசர் அவர்களே. 

எங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் குறித்து தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுரை கூறுவார். உங்களைப் போன்றவர்களுக்கு முன்பாக நாங்கள் கொண்டு போகப்படும்போது என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்றும் அவர் எங்களுக்கு சொல்லுவார்(மத்தேயு: 10:17-20). எனவே, நீங்கள் சொல்வது போல, சகோதரர், என் இயேசுவின் ஊழியக்காரர் பவுல் ஏமாற்றுக்காரர் அல்ல. இயேசுவின் கையில் அவர் ஒரு எழுத்தாணி. 

தேவனுடைய வழியை கெடுக்க அவர் வந்திருப்பாரானால், எனக்கு அது தெரிந்திருக்கும், ஆவியானவரும் அதை எனக்கு உணர்த்தியிருப்பார். இயேசுவின் நற்செய்தி இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமே நான் சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கும் போது, அப்படி இல்லை, உலகமனைத்திற்கும் இந்த நற்செய்தி சொந்தம் என்றுச் சொல்லி, ஆவியானவர் என்னை அன்னிய மக்களுக்கும் இயேசுவைப் பற்றி சொல்லும்படி வழி நடத்தினார்(அப்.நடபடிகள் 10ம் அதிகாரம்). எனவே, ஆவியானவர் எங்களோடு உள்ளார் எனவே, எங்களை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தங்கள் துர் செய்திகள் மூலம் வழி விலகச்செய்யமுடியாது. 

அரசர்: அப்படியா, பவுலுக்காக இப்படி பரிந்து பேசுகிறாயே, ஒரு முறை உனக்கு எதிர்த்து பவுல் பேசி எல்லாருக்கும் முன்பாக உன்னை அவமானப்படுத்தினானாமே? நீ இயேசுவோடு இருந்தவனா அல்லது பவுல் இருந்தவனா? உன்னை விடவா அவனுக்கு மார்க்க அறிவு அதிகமாக இருக்கப்போகிறது? உனக்கு கீழே இருக்கிறவன் எல்லாருக்கும் முன்பாக உன்னை கேவலப்படுத்தினானே, உனக்கு வெட்கமாக இல்லை? 

பேதுரு:  அரசே, நான் சொல்வதை சிறிது கவனமாக கேளுங்கள். கிறிஸ்தவத்தில் ஒருவன் உயர்ந்தவன், மற்றோருவன் தாழ்ந்தவன் என்று யாரும் எண்ணக்கூடாது. இதே போல, ஒரு முறை இயேசுவின் சீடர்களாகிய நாங்கள் பரலோகத்தில் யார் உயர்ந்தவர் என்று பேசிக்கொள்ளும் போது, இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து எங்கள் நடுவில் நிறுத்தி "இந்த பிள்ளையை போல" மாறுங்கள் என்றுச் சொன்னார். பெரியவன் சிறியவன் போல பணிவிடை செய்யவேண்டும் என்றுச் சொன்னார் 

நான் ஒரு தவறு செய்யும் போது சகோதரர் பவுல் அதை சுட்டிக்காட்டியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால், அப்படி பவுல் சுட்டிக்காட்டவில்லையானால், சில பெரியவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டக்கூடாது என்ற தவறான பழக்கம் எல்லாரிடமும் வளர்ந்து விடும். ஆனால், இப்படி பவுல் சொன்னதால், தேவனுடைய கட்டளைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், மனிதர்களுக்கு அல்ல என்பது தெளிவாக விளங்கும். 

எனவே, எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இன்னொரு விவரத்தையும் சொல்லிவிடுகிறேன், அரசே. இயேசுவிடம் கூட நான் இருந்ததால், நான் ஒன்றும் அதிகம் கற்றவன் என்றோ, ஞானவான் என்றோ பொருள் இல்லை அரசே. உண்மையைச் சொல்லவேண்டுமானால், இயேசு யாருக்கு என்ன வேலை கொடுப்பார்? யார் மூலம் தம் சித்தத்தை நிறைவேற்றிக்கொள்வார் என்று அவர் சரியாக நிர்ணயம் எடுப்பார். யூதர்களுக்கு நற்செய்தி சொல்ல என்னை உருவாக்கிய அதே இயேசு தான், யூதர் அல்லாதவர்களுக்கு நற்செய்தி சொல்ல பவுலை ஏற்படுத்தினார். எனவே, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து, உட்சாகப்படுத்தி, தேவைப்பட்டால் கடிந்துக்கொண்டு இயேசுவின் ஊழியத்தைச் செய்கிறோம் அவ்வளவு தான். 

அரசர்: அப்படியா! நாளை நான் பவுலிடமே பேசிக்கொள்கிறேன். நாளை சபைக்கு பவுலை அழைத்துவாருங்கள். பேதுரு, இன்று நீ போகலாம். தேவைப்பட்டால் நான் அழைத்தனுப்புகிறேன். நான் சொல்வதை நேரம் எடுத்து சரியாக சிந்தித்து உன் முடிவைச் சொல். நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், கடைசி நபியாகிய முகமது(PBUH) விற்கு வெளிப்பட்ட வேதமாகிய குர்‍ஆன் வேதம் என்று நீ ஏற்றுக்கொள்வாயானால், உனக்கு பாதுகாப்பு கிடைக்கும். நீ சுதந்திரமாக இந்நாட்டில் நடமாடலாம். இல்லையானால், வரிகட்டவேண்டி வரும், இன்னும் பல இன்னல்களை சந்திக்கவேண்டி வரும். உனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறேன், சிந்தித்து உன் முடிவைச் சொல். யாரங்கே? பேதுருவை அழைத்துச்செல்லுங்கள். 

பேதுரு:  ஒரு நிமிடம் அரசே, என் முடிவைச் சொல்ல இரண்டு நாட்கள் எதற்கு, அது வீண். என் முடிவு மாறாது. வேண்டுமானால், நீங்கள் உங்கள் பொல்லாத வழியை விட்டுவிட்டு, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, தேவனின் நியாயத்தீர்ப்பு நாளில் பயமில்லாமல் தைரியமாக நிற்கவேண்டுமானால், இன்றே இயேசுவை உங்கள் உள்ளத்தில் வர அனுமதியுங்கள். 

[அரசரின் முகம் சிகப்பாக மாறுகிறது, காவலர்கள் பேதுருவை அழைத்துச்செல்கிறார்கள். மறுநாள் அரச சபைக்கு அப்போஸ்தலர் பவுல் அழைத்துவரப்படுகிறார், அவரிடம் அரசர் என்ன கேள்விகளை கேட்கிறார் என்றும், பவுல் எப்படி காரசாரமாக பதில் அளிக்கிறார் என்பதை இந்த இரண்டாம் பாகத்தில் படிக்கவும்: 

பாகம் 2 - முஸ்லீம் அரச சபையில் அப்போஸ்தலர் பவுலடியார்
]

மூலம்: http://www.isakoran.blogspot.in/2007/11/1.html

”முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள்” கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்