எஸ்றா அல்லாவின் குமாரனா? குர்-ஆனின் சரித்திர தவறு

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? குர்-ஆன் 9:30 

முன்னுரை: குர்-ஆன், பல பைபிள் நிகழ்ச்சிகளை மறுபதிவு செய்துள்ளது. அப்படி மறுபதிவு செய்யும் போது சில நிகழ்ச்சிகளை பைபிளில் விவரித்துள்ளது போலவே சொல்லப்பட்டுள்ளது. மற்றும் சில நிகழ்ச்சிகளை குர்-ஆன் மாற்றி சொல்லியுள்ளது. இப்படி குர்-ஆன் மாற்றிச் சொல்லும் போது பல முரண்பாடுகளை செய்துள்ளது. 

குர்-ஆன் இன்னும் ஒரு படி மேலே சென்று கடந்த காலத்தில் நடந்திராத நிகழ்வுகள் நடந்ததாக சொல்கிறது. அப்படி சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி அல்லது நம்பிக்கை தான் நாம் மேலே படித்த குர்-ஆன் 9:30 வசனம். 

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (குர்-ஆன் 9:30) 

1. கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள் 

கிறிஸ்தவர்கள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. காரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, இந்த 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, "இயேசு தேவனுடைய குமாரன் " என்று சொல்கிறார்கள். 

இதிலும், கிறிஸ்தவர்கள் சொல்லும் "இயேசு தேவனுடைய குமாரன்" என்பது ஒரு ஆன்மீக முறையில் குமாரன் என்று சொல்கிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் அல்லது குர்-ஆன் சொல்வது, சரீர பிரகாரமான உறவு முறையில் இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் கருதுவதாக குர்-ஆன் சொல்கிறது. இந்த தற்போதைய கட்டுரையின் கருப்பொருள் இது அல்ல. பைபிள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்வதற்கும், "இயேசு தேவனுடைய குமாரன்" என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் என்று குர்-ஆன் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தனி கட்டுரையில் காணலாம். 

2. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள் 

பைபிளின் பழைய ஏற்பாட்டு வேதபாரகன்(வேத அறிஞன்) ஏஸ்றா என்பவரை யூதர்கள் "அல்லாவின் குமாரன் " என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இந்த வசனம் தான் இந்த கட்டுரையின் கருப்பொருள். 

குர்-ஆன் சொல்வது போல,

  • இப்படி யூதர்கள் சொன்னார்களா? 
  • பழைய ஏற்பாட்டு யூதர்கள் சொல்லியிருப்பார்களா? 
  • புதிய ஏற்பாட்டு யூதர்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா? 
  • இந்த 21ம் நுற்றாண்டு யூதர்கள் சொல்கிறார்களா? 
  • “ஓர் இறைக்கொள்கையை” மிகவும் தீவிரமாக நம்பும் யூதர்கள் இப்படி சொல்ல வாய்ப்பு உள்ளதா? 
  • இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ "யூதர்கள் இப்படி நம்புகிறார்கள்" என்று ஏதாவது புதிய ஏற்பாட்டில் சொன்னார்களா? அல்லது கண்டித்தார்களா? 
  • இயேசுவை யூதர்கள் கொலை செய்ய வேண்டும் என்று ஏன் துடித்தார்கள்?

போன்ற கேள்விகளுக்கு பதிலை இக்கட்டுரையில் அலசப்போகிறோம். இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தெரிந்துக்கொள்ளும் பொது, குர்-ஆன் 9:30 ல் உள்ள பிழையை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியும். 

2.1. யூதர்கள் "ஓர் இறைக்கொள்கையை" தீவிரமாக நம்புகிறவர்கள் (இஸ்லாமியர்களைப் போல): 

"யூதர்கள் எஸ்றாவை தேவனுடைய(அல்லாவுடைய) குமாரன்" என்று சொல்கிறார்கள் என்ற குர்-ஆனின் வாதம் ஆதாரமற்றது. ஏனென்றால், யூதர்கள் “ஓர் இறைக் கொள்கையை” நம்புகின்றனர். யூதர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது இராஜாதி இராஜாவாக வர இருக்கும் "மேசியாவை " மட்டும் தான். இந்த மேசியா ஒரு ஏழையாக, சாந்தமுள்ளவராக வருவார் என்று அவர்கள் நம்புவதில்லை. எனவே தான் இயேசு மேசியா என்று அவர்கள் நம்பவில்லை. 

ஒரு மனிதன் அல்லது நபி வந்து "நான் தான் அல்லா" என்றோ "இறைவன் என்றோ" சொன்னால், எப்படி முஸ்லீம்கள் நம்பமாட்டார்களோ அதே போல, யூதர்களும் நம்பமாட்டார்கள். எனவே, யூதர்கள் "எஸ்றா தேவனுடயை குமாரன் " என்று யூதர்கள் சொன்னார்கள் என்று குர்-ஆன் சொல்வது, ஒரு மிகப்பெரிய பொய்யாகும். 

2.2. யூதர்கள் கிறிஸ்தவர்களின் திரித்துவ கொள்கையை நம்பாதவர்கள்: 

கிறிஸ்தவர்களின் நம்பிக்கை திரித்துவ (Trinity) கொள்கையாகும், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்பது. ஆனால், யூதர்கள் இந்த திருத்துவ கொள்கையை நம்புவதில்லை, இயேசுவிற்கு தேவனுக்கு சமமான இடத்தை கொடுக்க யூதர்களின் "ஓர் இறைக்கொள்கை " தடையாக உள்ளது. [கிறிஸ்தவர்களும் ஒரு இறைவனைத்தான் நம்புகின்றனர், இது இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு அப்பாற்பட்டதால், திரித்துவ நம்பிக்கையைப் பற்றி நாம் தனி கட்டுரையாக காணலாம்.] 

யூதர்களின் இந்த நம்பிக்கைக்கு விரோதமாக யாராவது செயல்பட்டால், அவர்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டார்கள். இப்படித் தான் இயேசுவையும் அவர்கள் கொலை செய்தார்கள். எனவே, தேவனுக்கு குமாரன் எஸ்றா என்று யூதர்கள் சொல்ல வாய்ப்பு இல்லை. 

2.3. பழைய ஏற்பாட்டு யூதர்கள்,"எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்பினார்களா? 

ஏஸ்றா என்பவர் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால், பழைய ஏற்பாட்டில் யாராவது இப்படி சொல்லி இருக்கலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்லலாம். எனவே, எஸ்றாவை பற்றி பழைய ஏற்பாடு என்ன சொல்கிறது, யூதர்கள் அவர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று சிந்திப்பது நல்லது. 

1. எஸ்றா கி.மு. 4-5ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் வாழ்ந்தவர். 

2. எருசலேம் பாபிலோன் அரசனால் பிடிக்கப்பட்டு, பாபிலோனில் இஸ்ரவேலர்கள் அடிமைகளாக வாழ்ந்தார்கள். பாபிலோனை பெர்சிய அரசன் கைப்பற்றினான். 

3. பெர்சிய அரசன் "அர்தசஷ்டா" என்பவர், எருசலேமுக்கு செல்பவர்கள் செல்லலாம் என்று சொல்லி, பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பும்போது, எஸ்றா என்ற வேதபாரகன் தலைமையில் ஒரு குழு எருசலேமுக்கு சென்றது. 

4. மோசே மூலமாக கொடுக்கப்பட்ட நியாயபிராமாணத்தில் தேறியவராகவும், தேவனுக்கு பயந்தவராகவும் இருந்தார். 

5. எருசலேமிலே இருந்த இஸ்ரவேலர்கள் அன்னிய ஜனங்களோடு சம்மந்தம் கலந்து அவர்களின் அருவருப்புக்களை பின்பற்றியதால், வேதனைப்பட்டு, எல்லா மக்களுக்காக எஸ்றா மன்றாடி ஜெபித்தார், மக்கள் தங்கள் பாவங்களை விட்டு வாழும்படி உட்சாகப்படுத்தினார். 

6. எஸ்றா காலை முதல் மதியம் வரை நியாயபிரமாணத்தை வாசித்து இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளைகளை விளக்கிக்காண்பித்தார். மக்கள் தேவனுடைய வழியில் நடக்க உற்சாகம் கொண்டார்கள். (எஸ்றா 7-10 வரையுள்ள அதிகாரங்கள், நெகேமியா அதிகாரம் 8)

பழைய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் "தான் ஒரு தேவகுமாரன்" என்று எஸ்றா சொன்னதும் இல்லை. அதே நேரத்திலும் யூதர்கள் "எஸ்றாவை தேவ குமாரன்" என்று சொன்னதுமில்லை. அப்படி அவர்கள் சொல்லவேண்டிய அவசியமுமில்லை. 

எஸ்றா, நேகேமியாவின் காலத்திற்கு பின்பு ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை. இவர்கள் ஏற்றிச் சென்ற விளக்கு(எழுப்புதல்) இயேசு கிறிஸ்து வரும் வரை எரிந்துக்கொண்டு இருந்தது. இயேசு காலகட்டத்தில் வாழ்ந்த ஆசாரியர்கள், வேதபாரகர்கள் தங்கள் நம்பிக்கையில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். 

எஸ்றாவிற்கு முன்பு வாழ்ந்த தாவிது, சாலொமோன், மோசே, ஆபிரகாம் போன்ற பழைய ஏற்பாட்டு நபர்கள் யாருக்கும் எஸ்றா என்பவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. எனவே, இயேசுவின் காலத்திற்கு முன்பு 500 ஆண்டுகளில் வாழ்ந்த யூதர்களுக்கு மட்டும் எஸ்றாவைப் பற்றி தெரியும், மற்றும் இயேசு கிறிஸ்து முதல் முகமது வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு தான் எஸ்றாவைப் பற்றி தெரியும். 

எஸ்றாவின் விவரங்களைப் பற்றி நாம் படிக்கும் போது, குர்-ஆன் சொல்வது போல யூதர்கள் சொல்லியிருக்க முடியாது. அப்படி சொன்னவர்களை யூதர்கள் உயிரோடு வைத்திருக்கமாட்டார்கள். 

2.4. புதிய ஏற்பாட்டு யூதர்கள் "எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்பினார்களா? 

புதிய ஏற்பாட்டு காலத்தில் அதாவது இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களாவது இப்படி சொல்லியிருக்க வாய்ப்புள்ளதா என்று சிந்தித்தால், இதற்கும் வாய்ப்பு இல்லை. புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்த யூதர்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள் போன்ற பல விவரங்கள் மிகவும் தெளிவாக புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களும், மற்ற புத்தகங்களும் தெரிவிக்கின்றன. இன்னும் பல யூத பாரம்பரிய விவரங்கள் அடங்கிய பல பிரதிகள் இருக்கின்றன. இவைகளில் ஒன்றிலும் இப்படி "எஸ்றா தேவகுமாரன்" என்ற வாசகம் வராது.   

முதல் நூற்றாண்டு யூதர்கள் இப்படி நம்பியிருந்தால், அவர்கள் கிறிஸ்தவர்களை எதிர்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. அற்புதம் செய்து, மரித்தவர்களை உயிரோடு எழுப்பிய இயேசுவை கிறிஸ்தவர்கள் “தேவ குமாரன்” என்று அழைத்தார்கள், அதை யூதர்கள் மறுத்தார்கள். ஒரு வேளை குர்-ஆன் சொல்வது போல, முதல் நூற்றாண்டு யூதர்கள் “எஸ்றா தேவகுமாரன்” என்று சொல்லியிருந்தல், கிறிஸ்தவர்களே கேள்வி கேட்டு இருப்பார்கள். யூதர்கள் இயேசுவை எதிர்ப்பதற்கான ஆதாரமே அடிபட்டு இருக்கும். எனவே, முதல் நூற்றாண்டு யூதர்களும் சொல்லியிருக்க முடியாது. 

2.5. 21ம் நூற்றாண்டு யூதர்கள் "எஸ்றா தேவனின் குமாரன்" என்று நம்புகிறார்களா? 

இன்று வாழும் யூதர்களாவது இப்படி சொல்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் இல்லை. யூதர்கள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட "மேசியா" இயேசு தான் என்று நம்பாமல், இன்னும் மேசியாவிற்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர, எஸ்றா தேவகுமாரன் என்று சொல்லிக்கொண்டு இல்லை. குர்-ஆன் சொல்லும் விவரம் ஒரு ஆதாரமற்ற செய்தியே தவிர வேறு ஒன்றுமில்லை. 

2.6. இயேசுவை கொலை செய்யவேண்டும் என்று ஏன் யூதர்கள் துடித்தார்கள்? 

(காரணம், இயேசு செய்த அற்புதங்களா? அவரது கட்டளை கருத்துக்களா அல்லது வேறு ஒரு காரணமா?) 

யூதர்கள் குர்-ஆன் சொல்வது போல சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதற்கான மிகவும் தெளிவான காரணம் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. 

இயேசு பல அற்புதங்களை செய்தார், குருடர்களை பார்க்கச் செய்தார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். இதை குர்-ஆனும் ஆமோதிக்கிறது. 

யூதர்கள் இயேசுவின் அற்புதங்களைக் கண்டு அவரை விசுவாசிக்கவில்லை. காரணம் யூதர்களுக்கு அற்புதங்கள் ஒன்றும் புதிதல்ல. இயேசு அற்புதங்கள் செய்கிறார் என்று அவரை கொலை செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை.  ஒரு முறை இயேசு ஓய்வு நாளில் அற்புதம் செய்தபொது, இன்று செய்யவேண்டாம், வேறு நாட்களில் உங்கள் அற்புதங்களை செய்துக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னார்கள். இயேசு எது செய்தாலும், சொன்னாலும் சகித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால், தன்னை தேவகுமாரன் என்று சொன்னதை மட்டும் ஏற்கமாட்டார்கள். 

எப்போது இயேசு தன்னை ஒரு “தேவகுமாரன்” என்றுச் சொன்னாரோ, தன்னை “தேவனுக்கு சமமானவர்” என்றுச் சொன்னாரோ, அதை யூதர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்று முஸ்லீம்களுக்கு இருக்கும் இதே வைராக்கியம் தான் அன்று யூதர்களுக்கு இருந்தது. எனவே, “எஸ்றா தேவகுமாரன் என்று யூதர்கள் சொல்கிறார்கள் ” என்பது ஒரு மிகப்பெரிய தவறு.

மத்தேயு: 26: 63. இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி, நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64. அதற்கு இயேசு, நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65. அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. 66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள், மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள் .

இயேசு தன்னை தேவனுக்கு சமமாக உயர்த்தினதால்(தேவனுடைய வலது பக்கத்தில் உட்காருவேன் என்று இயேசு சொன்னதால்) ஆசாரியர்கள் "தேவதுஷணம்" என்றுச் சொல்லி இயேசுவை கொல்ல முடிவுசெய்தார்கள். 

எனவே யூதர்கள் அன்றும் சரி, இன்றும் சரி "எஸ்றா தேவனுடைய குமாரன்" என்று சொல்லவில்லை, சொல்லமாட்டார்கள். 

2.7 இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்களின் இந்த நம்பிக்கையை எதிர்த்தார்களா? 

இயேசு 33 1/2 ஆண்டுகள் வாழ்ந்ததாக அறிகிறோம். அவரது வாழ்நாட்கள் அனைத்தும் "நாசரேத்" என்ற ஊரிலும், எருசலேமிலும் அதைச் சுற்றிலும் இருந்த பகுதிகளிலும் தான் இருந்தது, யூதர்களின் மத்தியில் அவர் வாழ்ந்தார், அவரது வளர்ப்பு தந்தையும், மேரியும் யூதர்கள் தானே. இயேசு யூதர்களின் சில அவசியமில்லாத பழக்கங்களைப் பற்றி கடிந்துக்கொண்டார், இதனாலும் யூத ஆசாரியர்கள் அவர் மீது கோபம் கொண்டனர். ஆனால், ஒரு முறை கூட, "யூதர்கள் இப்படி தவறாக நம்புகிறார்கள், அதாவது எஸ்றாவை தேவகுமாரன் என்று யூதர்கள் நம்புகிறார்கள்" என்று இயேசு குற்றம் சாட்டவில்லை. அப்படி சொல்லியிருந்தால், அதை நாம் 4 சுவிசேஷங்களில் கண்டு இருப்போம் . 

இயேசுவின் சீடர்களுக்கு யூத நம்பிக்கைகளைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், ஒருவரும் "ஏஸ்றா தேவகுமாரன் " என்று யூதர்கள் சொல்கிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டவில்லை. அதைப் பற்றி குறிப்பிடவில்லை. இயேசுவின் சீடர்களுக்கும் யூத நம்பிக்கைகள் எல்லாம் தெரியும், முக்கியமாக அப்போஸ்தலர் பவுல் ஒரு யுதமார்க்கத்தை முழுவதும் அறிந்த பண்டிதர். அவரும் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. 

எனவே, குர்‍ஆன் சொல்லும் வசனம் வெறும் யூதர்கள் மீது முகமது சுமத்தும் குற்றச்சாட்டே தவிர உண்மையில்லை. 

3. யூதர்கள் "எஸ்றாவை" வணங்கியதாக சொல்லப்பட்ட ஹதீஸ்: 

இந்த கட்டுரைக்கு வலுவூட்டுவதாக ஒரு ஹதீஸ் உள்ளது. யூதர்கள் எஸ்றாவை தேவகுமாரன் என்று மட்டுமல்ல, "எஸ்றாவை" யூதர்கள் வணங்கியதாகவும் ஒரு ஹதீஸ் உள்ளது.

Bukhari :: Book 6 :: Volume 60 :: Hadith 105 

Narrated Abu Said Al-Khudri: 

………. Then the Jews will be called upon and it will be said to them, 'Who do you use to worship?' They will say, 'We used to worship Ezra, the son of Allah.' It will be said to them, 'You are liars, for Allah has never taken anyone as a wife or a son . What do you want now?' They will say, 'O our Lord! We are thirsty, so give us something to drink.' They will be directed and addressed thus, 'Will you drink,' whereupon they will be gathered unto Hell (Fire) which will look like a mirage whose different sides will be destroying each other. Then they will fall into the Fire. Afterwards the Christians will be called upon and it will be said to them, 'Who do you use to worship?' They will say, 'We used to worship Jesus, the son of Allah.' It will be said to them, 'You are liars, for Allah has never taken anyone as a wife or a son,' Then it will be said to them, 'What do you want?' They will say what the former people have said. ………

[(இது பெரிய ஹதீஸ் என்பதால், தேவையான பாகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது)] 

இந்த ஹதீஸின் படி நியாயத்தீர்ப்பு நாளில், ஒட்டுமொத்த கிறிஸ்தவர்கள் நம்பிக்கை "இயேசு தேவகுமாரன்" என்பதால், அவர்கள் பொய்யர்கள் என்று அல்லா சொல்வாராம். 

அதே போல யூதர்கள் அழைக்கபடுவார்களாம், அவர்களிடம் அல்லா சொல்வாராம், "நீங்கள் யாரை வணங்கினீர்கள்?" என்று. அப்போது யூதர்கள் "நாங்கள் அல்லாவின் குமாரனாகிய எஸ்றாவை வணங்கினோம்" என்று சொல்வார்களாம். அப்போது "நீங்கள் பொய்யர்கள்" என்று அல்லா சொல்வாராம். இது தான் இந்த ஹதீஸ். 

இந்த ஹதீஸின் படி, "எஸ்றா தேவகுமாரன்" என்று குர்-ஆன் சொல்வது, ஒரு சில யூதர்களின் நம்பிக்கை அல்ல. அது மொத்த யூதர்களின் நம்பிக்கை என்று அறியலாம். ஆனால், உண்மையில் யூதர்கள் இதை நம்புவதில்லை. அவர்கள் எஸ்றாவை தேவகுமாரன் என்று சொல்வதில்லை. 

இந்த ஹதீஸ் மூலம் நாம் அறியும் இன்னொரு விஷயம் என்னவென்றால், இன்றுள்ள யூதர்களும் "குர்-ஆன் சொல்வது போல நம்புகிறார்கள்" என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அதாவது நியாயதீர்ப்பு நாளில் இப்படி யூதர்கள் சொல்வார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. அப்படியானால், இன்று உலகத்தில் வாழும் யூதர்கள் கூட‌ இப்படி நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றல்லவா பொருள் கொள்ளமுடியும். இன்று எந்த யூதனாவது இப்படி நம்புகிறானா? இஸ்லாமியர்கள் தான் கேட்டு தெரிந்துக் கொள்ளவேண்டும். 

எனவே, எப்படி பார்த்தாலும், குர்-ஆன் 9:30ம் வசனம் யூதர்களைப் பற்றி சொல்லும் செய்தி, ஒரு மிகப்பெரிய சரித்திர தவறாகும். 

இவ்வசனத்தைப் பற்றி இஸ்லாமியர்களின் வாதங்கள்:

வாதம்: 1. இவ்வசனத்தில் அல்லா குறிப்பிடுவது “சில யூதர்களை” மட்டுமே! 

ஒரு வேளை இஸ்லாமியர்கள், யூதர்களில் சிலர் "எஸ்றா தேவகுமாரன்" என்று சொல்லியிருக்கலாம், எனவே, அவர்களைப் பற்றி தான் அல்லா இப்படி சொல்லியுள்ளார்" என்று சொல்லலாம். 

இது ஒரு சரியான காரணம் ஆகாது. ஏனென்றால், இது ஒட்டு மொத்த யூதர்களின் கூற்று என்று குர்-ஆனின் வசனத்தை படித்தால் புரியும்.   

குர்-ஆன் 9:30 யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?  

மேலே உள்ள வசனத்தில் "யூதர்கள்" என்று பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட யூதர்கள் என்றோ, சிலர் என்றோ அல்லா சொல்லவில்லை. 

இந்த வசனத்தின் முதல் பாகத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் கீழே காணலாம்.

Waqalati alyahoodu AAuzayrun ibnu Allahi 

Waqalati alnnasara almaseehu ibnu Allahi 

வகலதி அல்யஹூது அவ்ஜைரூன் இப்னு அல்லாஹி 

வகலதி அல்நசரா அல்மஸீஹு இப்னு அல்லாஹி

மேலே உள்ள வரிகளில், அரபியில் "அல்"(al) என்பது, ஆங்கிலத்தில் "The" என்பதற்கு சமமாகும். யஹூது என்றால் "யூதர்கள் " என்று பொருள். 

எனவே, அல்யஹூது என்றால், “The Jews “ என்று பொருள். இதே போல தான் அல்நசரா என்று சொல்லப்பட்டுள்ளது (நசரா என்றால், நசரேயராகிய இயேசு ) 

இந்த வசனத்தில் அல்லா "சில யூதர்கள் – Some Jews " என்றோ, ஒரு குறிப்பிட்ட யூதர்கள் என்றோ சொல்லவில்லை. ஒட்டு மொத்த யூதர்களையே குறிக்கிறார். 

அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகிய "இயேசு தேவகுமாரன்" என்பதற்கு ஈடாக யூதர்கள் "எஸ்றா தேவகுமாரன்" என்று சொல்கிறார்கள் என்று அல்லா சொல்லியுள்ளார். எனவே, இது ஒரு குறிப்பிட்ட யூதர்களை குறிக்காது. 

ஒரு வேளை சில யூதர்கள் இப்படி சொல்லியிருந்தாலும், அதை ஒட்டு மொத்த யூதர்களின் கூற்றாக எப்படி அல்லா கருதுகிறார்? இது தவறில்லையா? அப்படி அல்லா குறிப்பிடும் போது, சில யூதர்கள் இப்படி நம்புகிறார்கள், மற்றவர்கள் வேறுவிதமாக நம்புகிறார்கள் அல்லது சொல்கிறார்கள் என்று தானே அல்லா சொல்லியிருக்கவேண்டும் . 

இந்த வசனம் ஒன்றும் "யூதர்கள் தேவகுமாரன்" என்று ஒரு வீட்டின் மூலையில் உட்கார்ந்து இரகசியமாக சொன்னார்கள் என்று சொல்லவில்லை, அதற்கு மாறாக, கிறிஸ்தவர்கள் "இயேசு தேவ குமாரன்" என்று எப்படி எல்லாருக்கும் முன்பாக பிரகடனம் செய்கிறார்களோ அதற்கு ஈடாக அல்லவா சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனம் ஒரு சில குறிப்பிட்ட யூதர்களின் கூற்றாக அல்லா சொல்லாமல், ஒட்டு மொத்த யூத சமுதாயமே இப்படி சொல்கிறார்கள் என்று சொல்கிறார். எனவே, இஸ்லாமியர்களின் இந்த வாதம் பயனற்றது, ஆதாரமற்றது. 

வாதம்: 2. சில யூத பாரம்பரியம் "எஸ்றாவை யூதர்களின் தந்தை என்று சொல்கிறதே" அது எப்படி? 

யூதர்களுக்கு எஸ்றாவின் மீது மிகப்பெரிய மரியாதை இருந்தது. ஏனென்றால், அவர் இவர்களின் ஆன்மீய வாழ்விற்கு மிகவும் உதவியாக இருந்தார், அதை நான் மறுக்கவில்லை. வேண்டுமானால், எஸ்றா யூதர்களின் தந்தை என்று சொல்வதை நான் மறுக்கவில்லை. இதனால் ஒரு பிரச்சனையும் இல்லை. 

ஆனால், யூதர்கள் இவரை "தேவ குமாரன்" என்று சொன்னார்களா! என்பது தான் கேள்வி . இப்படி அவர்கள் தங்கள் மார்க்கத்திற்கு விரோதமாக சொல்லவில்லை. 

உதாரணத்திற்கு: மகாத்மா காந்தியை நாம் "தேசப் பிதா" என்று கூறுகிறோம். ஆனால், யாரும் மகாத்மா காந்தியை "இறைவனின் குமாரன் (அ) கடவுளின் மகன் " என்று சொல்லமாட்டார்கள். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. 

“தேசப்பிதா” என்பது அவரது "சமுதாய சேவைக்காக கொடுக்கப்பட்டது " 

“கடவுளின் குமாரன்” என்பது "மத சம்மந்தமானது ". 

மேற் கண்ட‌ இரண்டு பட்டங்களும் வெவ்வேறானவை, ஒன்றாகாது. 

அது போலத்தான், எஸ்றா ஆற்றிய சேவைக்காக அவருக்கு "யூதர்களின் தந்தை " என்று சொல்லப்படலாமே ஒழிய, அதற்காக "யூதர்களின் தந்தை என்று சொன்னவர்கள் தேவனின் குமாரன்" என்று கூட எல்லாரும் நம்புகிறார்கள் என்பது உண்மையல்ல. 

வாதம் 3: இந்த வசனத்திற்கு ஏன் முகமதுவின் காலத்தின் யூதர்கள் மறுப்பை தெரிவிக்க‌வில்லை. 

கீழ் கண்ட பத்தி சொல்வது போல, இந்த வசனம் மதினாவில் சொல்லப்பட்ட வசனம், மட்டுமல்ல, இது சொல்லப்படும் போது, முகமதுவை எதிர்க்கவோ, அல்லது அவரோடு வாதம் புரிவதற்கோ யூதர்கள் இல்லை என்பது தான் காரணம். 

First we note, that the entire discussion is based on Muslim sources only. These writers might just not have had the interest to report such protest. If writings by Jews from Medina had been preserved, our understanding of much of Muslim history might look very different. But even considering only the Muslim sources that are available, it is interesting that you ignore so much Islamic history! This Sura was "revealed" less that one year following the Battle of Hunain, after which the most of Arabia came under Muhammad's rule. Only a few communities of the "old order" remained scattered over some far corners of the country. Most of the Arabian Jews, at this point in time, either fled, converted, or were dead. Therefore, they were in no position to dispute Muhammad's "revelation". Source : www.answering-islam.org/Responses/Saifullah/ezra.htm 

முடிவுரை: 

குர்-ஆன் 4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்  

குர்-ஆன் 4:82 ல் அல்லா சொல்கிறார், குர்-ஆனில் எந்த பிழையும், முரண்பாடும் இருக்காது, அப்படி இருக்குமானால், இந்த குர்-ஆன் உலகை படைத்தவனிடமிருந்து வந்திருக்காது என்று. நாம் இந்த கட்டுரையில் படித்தது போல,  குர்-ஆன் சொல்வது போல யூதர்கள் நம்புகிறவர்கள் கிடையாது, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

இந்த கட்டுரையை படிப்பவர்களாகிய நீங்கள் ஒருவேளை முஸ்லீமாக இருப்பீர்களானால், இதைப் பற்றி சிந்திக்க வேண்டுகிறேன். 

உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய அறிஞர்களிடமும், இஸ்லாமிய தளங்களிலும் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். உண்மை மார்க்கத்தை தெரிவிக்கும் படி இறைவனிடம் வேண்டுங்கள். நிச்சயமாக இயேசு உங்களுக்கு உண்மை மார்க்கத்தை காட்டுவார். உங்களை வெளிச்சத்தின் பால் அழைப்பார். நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்கிறார். இந்த சத்திய மார்க்கத்தை நீங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

இதைப் பற்றிய ஆங்கில கட்டுரைகள்:

1. Responses to Islamic Awareness: Was 'Uzayr (Ezra) Called The Son Of God?   

2. Is Ezra ‘a son’ or ‘the Son’ of God?  

3. False and/or misleading statements in the Qur’an  

4. Islamic Awarness Article 

5. Ezra Wikipedia

6. Book of Ezra Wikipedia


உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

உமரின் இதர தலைப்புக்கள்